பன்மடங்கு பலன்களைத் தரும் சோமவார பிரதோஷ விரதம்!

பரமேஸ்வரன் விஷம் உண்டது ஏகாதசி நாளில் . பள்ளி கொண்டது துவாதசியில். உலகமெலாம் உய்வுறத் தாண்டவமாடியது திரயோதசி நாளில். அதுவும் அந்திசாயும் நேரத்தில்.

இந்தக் காலத்தைத்தான் பிரதோஷக்காலம் என்கிறோம். பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும். சகல செளபாக்கியங்களும் உண்டாகும். இந்திரனுக்கு சமமான புகழும், செல்வாக்கும் கிட்டும்.

அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கு மிக உகந்த நேரம் பிரதோஷ நேரம்தான். பிரதோஷ நேரத்தில் உலகம் ஒடுங்குகிறது. எனவே ஈசனிடம் ஒடுங்க அதுவே சரியான நேரம்.

பிரதோஷ நேரத்தில் சிவன் எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிக்கொள்வதாகவும், இந்நாளில் சிவனைத் தரிசித்தால் கடன், வறுமை, நோய்ப்பயம் போன்றவை விலகும் என்பது ஐதிகம்.

14 ஆண்டுகாலம் பிரதோஷ நாளில் முறையாக சிவாலய தரிசனம் செய்பவர்கள், சாரூப்ய பதவி பெற்று, சிவகணங்களாகிவிடுவார்கள் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.

சோமவார பிரதோஷநாளில் இருக்கும் விரதம் பன்மடங்கு பலன்களைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை. நாள் முழுக்க நீர் ஆகாரத்தை தவிர வேறு எதையும் உண்ணாமல் விரதம் இருக்க வேண்டும்.

நெற்றியில் திருநீறு அணிந்து சிவன் நாமத்தை ஜபித்துக்கொண்டிருக்க வேண்டும். மாலை சிவன் கோயிலுக்குச் சென்று ஒரு கைப்பிடி காப்பரிசி, ஒரு பிடி வன்னி இலை, ஒரு பிடி அருகம்புல் ஆகியவற்றை நந்தியின் கொம்புகளுக்கிடையில் அர்ப்பணித்து, விளக்கேற்றி நந்தியையும் சிவனையும் தொழுதால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும் அபிஷேகப்பிரியாரான சிவனுக்கு தேன், பால், பன்னீர், சந்தனம், வில்வ இலை, தாமரை பஞ்சாமிர்தம் போன்றவற்றை சமர்ப்பிக்கலாம். சிவபெருமானுக்கும், நந்திக்கும் தூய பசும்பால் அபிஷேகத்திற்கு வாங்கித்தரலாம்.

கொண்டக்கடலை எலுமிச்சை சாதமோ தயிர்ச்சாதமோ, சர்க்கரைப் பொங்கலோ வெண்பொங்கலோ இறைவனுக்கு நைவேத்தியம் செய்து, பக்தர்களுக்குக் கொடுப்பதன் மூலம் தடைகள் நீங்கும். முன்னேற்றம் கிடைக்கும்.

பிரதோஷ காலத்தில் காப்பரிசி நிவேதனத்தை நந்திக்கு சமர்ப்பிப்பது மிகவும் சிறப்பானது. பிரதோஷ நாளான இன்று தவறாமல் விரதம் இருந்து ஈசனை வழிபட்டு வளம் பெறலாம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!