மார்ச் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு – இந்திய வானிலை மையம் கணிப்பு

கோடைகாலம் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது வாட்டி வதைக்கும் கடுமையான வெயில் தான். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மே மாதங்களில் கோடைகாலத்தின் தாக்கம் இருக்கும்.

அதிலும் மக்கள்தொகை நிறைந்து எப்போதும் பரபரப்பாக சாலைகளில் இயங்கிக் கொண்டிருக்கும் பொதுமக்கள் நிறைந்த இடங்களில் கோடை காலத்தின் தாக்கம் ஆக்ரோஷமாய் இருப்பதை யாரும் மறுக்க முடியாது.

கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ள இப்போது இருந்தே பொதுமக்கள் தர்பூசணி, இளநீர், வெள்ளரிக்காய் பழரசம், குளிர்பானம் உள்ளிட்டவற்றை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியாவில் 1901ஆம் ஆண்டுக்கு பிறகு கடந்த பிப்ரவரி மாதத்தில் அதிக வெப்பம் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கோடை காலம் முன்கூட்டியே தொடங்கியுள்ளதாகவும் இந்தியாவில் இந்த மாதம் முதல் மே மாதம் வரை கடுமையான வெப்ப அலை இருக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் கணித்துள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில், வழக்கத்திற்கு மாறாக வெப்பநிலை உயர்ந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ள மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.

வெப்பத்தால் ஏற்படும் உடல் பாதிப்பு குறித்து தினசரி கண்காணிப்பை, அனைத்து மாநிலங்களும் மேற்கொள்ள வேண்டும் என்றும் வெப்பத்தால் ஏற்படும் தாக்கங்கள், வெப்ப அலையால் ஏற்படும் நோய்களை எதிர்கொள்ள ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!