இனி நிஜ யானைக்கு வேலையில்லை- கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட எந்திர யானை!

கேரளாவில் உள்ள பெரும்பாலான கோவில்களில் யானைகள் வளர்க்கப்படுகின்றன. கோவில் விழாக்கள் மற்றும் சாமி ஊர்வலத்தில் இந்த யானைகள் பங்கேற்பது வழக்கம்.

மேலும் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்குவது, கோவிலின் அன்றாட பூஜைகளிலும் யானைகள் கலந்து கொள்ளும். இவ்வாறு கோவில்களில் வளர்க்கப்படும் யானைகள் சில நேரங்களில் மதம் பிடித்து பாகன்களை தாக்குவது, பக்தர்களை விரட்டுவது போன்ற சம்பவங்கள் நடந்தன.

இது போன்ற சம்பவங்களை தடுக்கவும், யானைகளை பாதுகாக்கவும் விலங்குகள் நல வாரியம் ஆலோசனை நடத்தி வந்தது. இதன் நிர்வாகி ஒருவர் அசல் யானைகளுக்கு பதில் ரோபோ யானைகளை பயன்படுத்தினால் என்ன? என்று யோசித்தார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டார்.

அதன்படி கோவில் யானை போன்று எந்திர யானை ஒன்று உருவாக்கப்பட்டது. அச்சு அசல் உயிருள்ள யானை போல தயாரிக்கப்பட்ட இந்த யானைக்கு நெற்றி பட்டம் உள்ளிட்ட அலங்காரங்களும் செய்யப்பட்டன.

பின்னர் இந்த யானை கோவிலில் செய்ய வேண்டிய செயல்பாடுகள் குறித்த பயிற்சியும் அளிக்கப்பட்டது. இவை அனைத்தும் திருப்திகரமாக இருந்தது.

இதையடுத்து எந்திர யானை நேற்று திருச்சூர் ஸ்ரீகிருஷ்ணர் கோவிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டது. தற்போது இந்த யானை கோவில் முன்பு நிறுத்தப்பட்டு உள்ளது. இதனை கோவிலுக்கு வந்த பக்தர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து சென்றனர்.

மேலும் இந்த யானை தும்பிக்கையை நீட்டி பக்தர்களுக்கு ஆசியும் வழங்குகிறது. இனி கோவிலில் நடைபெறும் ஊர்வலத்தில் சாமி சிலைகளையும் இந்த எந்திர யானையே சுமந்து செல்லும்.

இது பற்றி விலங்குகள் நல வாரியத்தினர் கூறும்போது, எந்திர யானைகள் பயன்படுத்துவதன் மூலம் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு இனி இடையூறு இருக்காது என்றனர்.News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!