பிரித்விஷா மீது ஜாமீனில் வெளிவந்த பெண் பிரபலம் மானபங்க புகார்!

மும்பை ஓட்டலில் ஏற்பட்ட தகராறு வழக்கில் கைதான சமூகவலைதள பெண் பிரபலம் சப்னா கில், கிரிக்கெட் வீரர் பிரித்விஷா மீது மானபங்க புகார் அளித்து உள்ளார்.

பிரித்விஷா கார் மீது தாக்குதல்

கிரிக்கெட் வீரர் பிரித்விஷா கடந்த சில நாட்களுக்கு முன் நண்பர் ஆஷிஸ் யாதவுடன் மும்பை விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலுக்கு சென்று இருந்தார்.

ஓட்டலில் செல்பி எடுக்கும் விவகாரத்தால் சமூகவலைதள பெண் பிரபலம் சப்னா கில் (வயது 26) மற்றும் அவரது நண்பர்களுடன் கிரிக்கெட் வீரர் பிரித்விஷாவுக்கு தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தகராறில் சப்னா கில் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பிரித்விஷாவின் காரை தாக்கினர். மேலும் அவர்கள் பிரித்விஷாவை தாக்க முயற்சி செய்து, அவரின் நண்பர் ஆஷிஸ் யாதவிடம் பணம் பறிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சப்னா கில், அவரது நண்பர் சோபித் தாக்குர் (வயது19) உள்பட 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மானபங்க புகார்

இந்தநிலையில் ஜாமீனில் வெளிவந்த சப்னா கில், அந்தேரி ஏர்போர்ட் போலீசில் கிரிக்கெட் வீரர் பிரித்விஷா மீது மானபங்க புகார் அளித்து உள்ளார். அந்த புகாரில் கூறப்பட்டு இருப்பதாவது:- நானும், எனது நண்பர் சோபித் தாக்குரும் அடிக்கடி விமான நிலையம் அருகில் உள்ள ஓட்டலுக்கு செல்வது வழக்கம்.

சம்பவத்தன்று கிரிக்கெட் வீரர் பிரித்விஷா நண்பர்களுடன் ஓட்டலில் விருந்து கொண்டாடி கொண்டு இருந்தார். அவர் மதுபோதையில் இருந்தார். சோபித் தாக்குர் கிரிக்கெட் ரசிகர் என்பதால், பிரித்விஷாவிடம் செல்பி எடுக்க விரும்பினார்.

அவா் செல்பி எடுக்க சென்றபோது தான் மோதல் ஏற்பட்டது. இளம் வாலிபரான அவருக்கு மதுபோதை கும்பலின் கொடூரம் பற்றி தெரியவில்லை. அந்த கும்பலிடம் இருந்து சோபித் தாக்குரால் தன்னை காப்பாற்றி கொள்ள முடியவில்லை.

எனவே தாக்குதலில் இருந்து சோபித் தாக்குரை காப்பாற்றத்தான் நான் முயற்சி செய்தேன். மதுபோதையில் இருந்த பிரித்விஷாவிடம் கெஞ்சினேன். ஆனால் அவர் என்னை மானபங்கம் செய்தார். அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த புகார் குறித்து பரிசீலித்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!