மகா சிவராத்திரி விரதம் எப்படி இருக்க வேண்டும்..?

சிவராத்திரிகள் பல இருந்தாலும் மாசி மாதத்தில் கிருஷ்ண பட்சத்தில் வரும் புண்ணிய தினமே மகாசிவராத்திரி ஆகும். இந்துக்களின் முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானை எண்ணி முழு நாளும் வழிபடும் சிறப்பான விரதம் இந்த சிவராத்திரி ஆகும்.

அலை பாய்ந்து அவதிப்படும் மனிதனது ஐம்புலன்களும் ஓரிடத்தில் ஒடுங்கி பரமாத்மாவாகிய பரம் பொருளிடம் ஒடுங்கும் இந்த ராத்திரி மங்கலமான ஒளி சிந்தும் ராத்திரியாகும். நமது ஐம்புலன்களையும் அடக்கி இறைவனது சிந்தனையோடு இறையன்பில் மூழ்கியிருக்கும் போது இந்த உலகின் இடையூறுகள் நம்மை எதுவும் செய்வதில்லை.

உலகினில் உள்ள எல்லா பொருட்களுமே மாயையிடம் ஒடுங்கும். அப்படி மகா சக்தியிடம் ஒடுங்கும் காலம் இருள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலம் மகா பிரளயம் என்று சொல்லப்படுகின்றது. உலகம் எத்தனை காலம் இருக்கின்றதோ அத்தனை காலமும் பிரளயமும் உண்டு.

இந்த காலத்தில் தான் உமாதேவி நான்கு காலமும் சிவனைப் பூஜித்தார். முழு முதற் கடவுளான சிவபெருமான் மனம் இறங்கி உமாதேவியை நோக்கி உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.

அதற்கு அம்மையார் நான் தங்களை மனமுவந்து பூஜித்த இந்த நாள் சிவராத்திரி எனப் பெயர் பெற வேண்டும். இந்த தினத்தில் உங்களை முழு மனதோடும் பயபக்தியோடும் பூஜிப்பவர்கள் தங்கள் அருளினால் சகல பாக்கியங்களையும் பெற வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்.

இறைவனும் அவரது கோரிக்கையை ஏற்றுக் கொண்டார். அதனால் தான் சிவராத்திரி சிவ பூஜைக்கு சிறந்த நாளாகக் எடுத்துக் கொள்ளப்படுகின்றது.

சிவராத்திரி பற்றி பல கதைகள் மூலமாகவும் சிவராத்திரி மகிமை கூறப்படுகின்றது. சிவராத்திரியன்று நான்கு ஜாமங்களுக்கும் தனித்தனியான பூஜை முறைகள் சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளன.

அதைக் கடைப்பிடித்தால் அனைத்துப் பலன்களையும் பெற முடியும். முக்கியமாக அன்று நாம் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். முதலாவது அபிஷேகம்.

இது ஆன்மாவைத் தூய்மைப்படுத்துவதற்குறியது. அடுத்தது லிங்கத்துக்குக் குங்குமம் அணிவித்தல். இது நல்லியல்புகளையும் பலன்களையும் குறிக்கிறது.

மூன்றாவது பல்வேறு வகையான உணவுகளைச் சிவபெருமானுக்கு நைவேத்யமாகப் படைக்கப்படுகிறது. இது வாழ்க்கையில் நீண்ட ஆயுளையும் நம்முடைய விருப்பங்களையெல்லாம் நிறைவேற்றுவதையும் குறிக்கும்.

நான்காவதாக செய்ய வேண்டியது தீபம் ஏற்றுதல், இல்வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை செல்வங்களையும் நமக்குக் கொடுக்கும். எண்ணெய் விளக்கேற்றுவதால் நமக்கு அவசியமாகத் தேவைப்படுகிற ஞானத்தை அடைய முடியும். வெற்றிலை வழங்குவதால் உலக இன்பங்களையெல்லாம் அனுபவித்து முழுதிருப்தி அடைய முடியும்.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரே ஒரு நேரம் மட்டும் சாப்பிட வேண்டும். துவைத்த ஆடை உடுத்த வேண்டும். தூய்மையான மனதுடன் சிவனை வணங்க வேண்டும். அன்று இரவு முழுவதும் சிவனை நினைச்சு மந்திரம் ஓதியோ, புராணங்களைப் படித்தோ உறங்க வேண்டும்.

மறுநாள் அதிகாலையில் நல்ல சுத்தமான நீரில் குளித்துச் சூரிய உதயத்துக்கு முன்னாடி சிவசிந்தனையோடு கோவிலுக்குப் போய் வணங்க வேண்டும். பகல் முழுவதும் உணவு எதுவும் தேவையில்லை. இரவிலும் மறுமுறை குளித்து, கோவிலில் நான்கு காலங்களிலும் நடைபெறும் பூஜைகளைக் கண்டு சிவனை வணங்கி இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும்.

அவசியம் நாலுகால பூஜையையும், பார்க்க வேண்டும். அப்படி இல்லாவிட்டாலும் கூட கடைசி 14 நாழிகையான லிங்கோத்பவ காலம் முழுவதுமாவது பஞ்சாட்சரம் சொல்லி வழிபட வேண்டியது அவசியம். தேன், பால், தயிர், நெய் ஆகியவற்றால் அபிஷேகம் செய்வது எண்ணற்ற பலன்களைக் கொடுக்கக் கூடியது.

அபிஷேகம் எதற்காகச் செய்யப்படுகிறது? சிவபெருமான் ஆலகால விஷத்தை உட்கொண்டதால் அவரோட உடல் மிகவும் வெப்பமாக மாறி விடுவதாக ஐதீகம்.

அந்த வெப்பத்தைத் தணிப்பதற்காகவே அவருக்குப் பல்வேறு வகையான பொருட்களைக் கொண்டு அபிஷேகம் செய்கிறோம். வெண்பொங்கல், வடை, அன்னம், தோசை போன்றவற்றை நிவேதனமாகப் படைக்க வேண்டும்.

சிவனுக்கு மிகவும் விருப்பமானது வில்வம், விலக்க வேண்டியது தாழம்பூ. மகா சிவராத்திரி அன்று தான் நான்கு சாமங்களிலும் ருத்திராபிஷேகம் செய்து வில்வத்தால் சகஸ்ரநாம அர்ச்சனை செய்ய வேண்டும். அப்படி செய்யும் போது இவ்வுலக சுகமும் மறுமையில் கைலாசமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!