பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பதவியை ராஜினாமா செய்தார் சேத்தன் சர்மா!

தனியார் டி.வி. சேனல் நடத்திய ரகசிய ஆபரேஷனில் ஏடாகூடமாக பேசி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வு கமிட்டி தலைவர் சேத்தன் ஷர்மா சர்ச்சையில் சிக்கினார்.

தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், விராட் கோலி ஆகியோருடன் கலந்து ஆலோசித்த அணியின் உள்விவகாரங்களை தேவையில்லாமல் வெளியிட்ட அவர், நிறைய வீரர்கள் முழு உடல்தகுதியுடன் இல்லாவிட்டாலும் கூட கிரிக்கெட் களத்திற்கு சீக்கிரம் திரும்புவதற்காக ஊசி போட்டுக் கொள்வதாகவும் குற்றம் சாட்டினார்.

காயத்தில் இருந்து மீண்ட ஜஸ்பிரித் பும்ரா அணிக்கு திரும்புவதில் நிர்வாகத்தில் இருவிதமான கருத்துகள் நிலவியதாகவும், ரோகித் சர்மாவை டெஸ்ட் அணியின் கேப்டனாக நியமிப்பதில் அப்போதைய கிரிக்கெட் வாரிய தலைவர் சவுரவ் கங்குலிக்கு விருப்பமில்லை, ஆனால் அவருக்கு கோலியையும் பிடிக்கவில்லை என்றும் அம்பலப்படுத்தியுள்ளார்.

இப்படி அணியின் பல்வேறு விஷயங்களை கசியவிட்ட சேத்தன் ஷர்மாவின் பதவிக்கு சிக்கல் ஏற்பட்ட நிலையில் தனது பதவியில் இருந்து சேத்தன் சர்மா விலகியுள்ளார். தனது பதவி விலகல் கடிதத்தை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷாவிற்கு அனுப்பி வைத்துள்ளார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!