உருட்டுக்கட்டையால் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரை அடித்து கொன்ற போலீஸ்காரர்..!

ஊதிய உயர்வை தடுத்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் உருட்டு கட்டையால் அடித்து கொல்லப்பட்டார். இது தொடர்பாக உடன் வேலைபார்க்கும் போலீஸ்காரர் கைது செய்யப்பட்டார்.

ஒழுங்கு நடவடிக்கை தானே மாவட்டம் கல்யாண் ரெயில்வே போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வந்தவர் பசவராஜ் கார்க் (வயது56).

அதே போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தவர் பங்கஜ் யாதவ்(40). கடந்த 2 ஆண்டுக்கு முன்பு இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. கைகலப்பில் ஈடுபட்டதில் சப்-இன்ஸ்பெக்டர் பசவராஜ் கார்க்கிற்கு ரத்தகாயம் ஏற்பட்டது.

இதுபற்றி போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து அவர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரை செய்தார். போலீஸ்காரர் பங்கஜ் யாதவ் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக அவருக்கு ஊதிய உயர்வு கிடைக்கவில்லை.

உருட்டு கட்டையால் அடித்து கொலை
இதையடுத்து பங்கஜ் யாதவ் தனக்கு ஊதிய உயர்வு கேட்டு அதிகாரிகளை சந்திக்க முயற்சி செய்தார். இதில் முடியாமல் போனது. மேலும் இதற்கு காரணம் சப்-இன்ஸ்பெக்டர் பசவராஜ் கார்க் தான் என்று கருதினார்.

நேற்று முன்தினம் இரவு 8.40 மணி அளவில் கல்யாணில் உள்ள ரெயில்வே போலீஸ் தங்குமிடத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பசவராஜ் கார்க்கை சந்தித்தார். தனது ஊதிய உயர்வை தடுத்து நிறுத்தியது தொடர்பாக வாக்குவாதத்தில் ஈடுபட்டு அங்கு கிடந்த உருட்டு கட்டையால் அவரது தலையில் பல முறை ஓங்கி அடித்துவிட்டு தப்பி சென்றார்.

போலீஸ்காரர் கைது

இதில் பலத்த காயமடைந்த சப்-இன்ஸ்பெக்டர் பசவராஜ் கார்க்கை மற்ற போலீசார் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று காலை அவர் உயிரிழந்தார். இது குறித்து கொல்சேவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து போலீஸ்காரர் பங்கஜ் யாதவை தேடிவந்தனர்.

அவர் ராய்காட் மாவட்டம் பென் பகுதியில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் அங்கு சென்று அவரை பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை கல்யாண் கோர்ட்டில் ஆஜர்படுத்தி தங்களது காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர். சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரை போலீஸ்காரர் அடித்து கொலை செய்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!