ஒரு வாரத்தில் மணமகனாக வேண்டிய வீரர், முதல்-மந்திரி இல்லத்தில் மர்ம மரணம்!

உத்தர பிரதேசத்தில் முதல்-மந்திரி இல்லத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வீரர் காயங்களுடன் மர்ம மரணம் அடைந்து கிடந்துள்ளார்.

உத்தர பிரதேசத்தில் ஆஷியானா பகுதியில் உள்ள முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் இல்லத்தில் பிரதேச ஆயுத காவல் படை பிரிவை சேர்ந்த விபின் குமார் (வயது 25) என்ற பாதுகாப்பு வீரர் கடந்த ஒரு மாத காலம் பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

அவர் அலிகாரி நகரின் கெய்ர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட ஆண்டிலா பகுதியில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று மாலை பணி முடிந்து அரசு வாகனத்தில் தனது முகாமுக்கு அவர் திரும்பியுள்ளார். இதுபற்றி காவல் ஆய்வாளர் அஜய் பிரகாஷ் மிஷ்ரா கூறும்போது, வாகனத்தில் புறப்பட்ட சற்று நேரத்தில், துப்பாக்கி குண்டு வெடித்த பலத்த சத்தம் கேட்டது.

உடனே, சக வீரர்கள் ஓடி சென்று பார்த்தனர். அதில், குண்டு காயங்களுடன் விபின் சுயநினைவற்று கிடந்துள்ளார். உடனடியாக அவரை சிகிச்சைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால், அவர் உயிரிழந்து விட்டார்.

அவர் தற்கொலை செய்து கொணடாரா? அல்லது யாரேனும் அவரை சுட்டு கொன்றனரா? அல்லது தற்செயலாக நடந்த செயலா? என்பது பற்றி விசாரணை நடந்து வருகிறது என கூறியுள்ளார். அந்த ஆயுதம் பற்றிய தடய அறிவியல் சோதனை நடந்து வருகிறது. விபினுக்கு வருகிற குடியரசு தினத்தில் திருமணம் நடைபெற இருந்தது என்று அவரது சக வீரர்கள் கூறியுள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!