நடிகையிடம் அத்துமீறிய சட்டக் கல்லூரி மாணவர் சஸ்பெண்ட்!

சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று படத்தில் நடித்ததன் மூலம் தேசிய விருது பெற்றவர் நடிகை அபர்ணா பாலமுரளி. கேரளாவை சேர்ந்த நடிகை அபர்ணா பாலமுரளி ஏராளமான மலையாள படங்களிலும் நடித்து வருகிறார்.

இவர் தற்போது நடிகர் வினித் ஸ்ரீனிவாசனுடன் தங்கம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்திற்கான விளம்பர நிகழ்ச்சி கேரளாவின் எர்ணாகுளத்தில் உள்ள சட்டக்கல்லூரியில் நடந்தது. விழா தொடங்கியதும் மேடையில் வினித் மற்றும் அபர்ணா பாலமுரளி ஆகியோர் அமர்ந்து இருந்தனர். அப்போது மேடையின் முன்பிருந்த மாணவர் ஒருவர் வேகமாக மேடையில் ஏறி அபர்ணா பாலமுரளி அருகில் சென்றார்.

கையில் பூவுடன் சென்ற அவர், அபர்ணாவுக்கு பூ கொடுத்து அவரது தோளில் கைபோட்டார். இதனை சிறிதும் எதிர்ப்பார்க்காத அபர்ணா கூச்சத்துடன் விலகி செல்ல முயன்றார். ஆனால், அந்த மாணவரோ அபர்ணாவின் கையை பிடித்து இழுத்து போட்டோ எடுக்க முயன்றார்.

மேடையில் நடந்த இந்த நிகழ்வு, அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. உடனே அவர்கள், நடிகையிடம் தவறாக நடக்க முயன்ற மாணவரை கண்டித்தனர். உடனே அவர் மீண்டும் மேடையில் ஏறி நடிகையிடம் மன்னிப்பு கேட்டார். நடிகையின் தீவிர ரசிகர் என்றும், அவருடன் போட்டோ எடுக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் அவ்வாறு நடந்து கொண்டதாகவும், இதற்காக மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறினார்.

அதன்பின்பு அந்த மாணவர், தன்னை மன்னித்துவிடும் படி நடிகையிடம் கூறிவிட்டு அவருக்கு மீண்டும் கைகொடுக்க முயன்றார். ஆனால் நடிகை அபர்ணா அந்த மாணவருக்கு கைகொடுக்க மறுத்துவிட்டார். பின்னர் அந்த மாணவர் மேடையில் இருந்து இறங்கி சென்றார். இந்த காட்சிகள் அனைத்தும் சமூக வலை தளத்தில் வைரலானது. இதற்கு திரையுலகினர், ரசிகர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்தனர். இந்நிலையில் அபர்னா பாலமுரளியிடம் தவறாக நடந்து கொண்ட மாணவரை ஒரு வாரம் சஸ்பெண்ட் செய்து சட்டக் கல்லூரி பணியாளர் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!