கார் மோதிய விபத்தில் பெண் தலைமை காவலர் உயிரிழப்பு..!

சென்னை, தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக (எஸ்ஐ) பணிபுரிபவர் ரமா பிரபா. இவர் நேற்று முன்தினம் பணி முடிந்து வீட்டுக்கு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்றுள்ளார்.

அப்போது குரோம்பேட்டை ஜிஎஸ்டி சாலை அருகே விபத்தில் சிக்கியுள்ளார். பலத்த காயம் ஏற்பட்டதால், உடன் பணிபுரியும் பெண் தலைமைக் காவலர் ஷீலா ஜெபமணியை (வயது 51) உதவிக்கு அழைத்துள்ளார். உடனே எதையும் யோசிக்காத ஜெபமணி, இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.

விபத்தான பகுதிக்கு அருகே செல்லும்போது, ஜெபமணி வாகனத்தின் மீது பின்னால் வந்த கார் அசுர வேகத்தில் மோதியுள்ளது. இதனால் நிலைதடுமாறி விழுந்துள்ளார். தலையில் பலத்த காயமடைந்து சுயநினைவற்று கிடந்துள்ளார்.

அங்கிருந்தவர்கள் உடனடியாக 108 ஆம்புலன்ஸை அழைத்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கே தலையில் 7 தையல்கள் போட்டும், மயக்க நிலையிலேயே இருந்துள்ளார். நிலைமை மோசமானதால் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இவ்விபத்து தொடர்பாக குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையின் முடிவில் கார் ஓட்டுநர் பல்லாவரத்தைச் சேர்ந்த சக்தியை (வயது 41) கைது செய்தனர். விபத்தில் சிக்கிய பெண் எஸ்ஐ-யை பார்க்க சென்ற பெண் தலைமை காவலர் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சென்னையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!