குரங்கிற்கு சாப்பாடு ஊட்டி விட்ட தலைமை ஆசிரியர்!

மனிதர்களுக்கும் விலங்குகளுக்குமான பந்தத்தை சொல்லி தெரிய வேண்டியதில்லை. அந்த அளவுக்கு மனிதர்கள்-விலங்குகளுக்கு இடையே பாசம் வாழ்க்கையில் நடைபெறும் சிறப்பு அத்தியாயம் போல் தனி எபிசோடு தான். எங்கேயாவது குரங்கு இறந்துவிட்டால், அதை முறைப்படி இறுதிச்சடங்கு நடத்தி அடக்கம் செய்யும் சம்பவங்களும் நடந்து தான் வருகிறது.

சமீபத்தில் புதுச்சேரியில் மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி உயிரிழந்த சம்பவம் மக்களை ஒட்டுமொத்த சோகத்தில் ஆழ்த்தியது. மதத்தை கடந்தும் அனைத்து சமுதாய மக்களும் திரண்டு வந்து அந்த யானைக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

அதுபோல் நாய்கள், பூனை, கிளி, ஆடு, மாடுகளையும் மக்கள் தங்களது வீடுகளில் வளர்த்து தங்களது குடும்பத்தில் ஒருவரைபோல் பாவித்து வருகிறார்கள். அந்த வளர்ப்பு பிராணிகளுக்கு உடல் நலம் குன்றினாலோ அல்லது காயம் ஏற்பட்டாலோ துடித்து போய்விடுவார்கள்.

இந்த நிலையில் பள்ளிக்கு அழையா விருந்தாளியாக வந்த குரங்கிற்கு தலைமை ஆசிரியர் ஒருவர் உணவு ஊட்டிய ‘ருசி’கர சம்பவம் நடந்துள்ளது.

அதாவது கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ளது ஜப்பலகூட்டா கிராமம். இங்கு அரசு உயர்தொடக்கப்பள்ளிக் கூடம் செயல்பட்டு வருகிறது. இங்கு 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் கல்வி பயின்று வருகிறார்கள். அவர்களுக்கு கர்நாடக அரசு சார்பில் மதிய உணவு இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளி வளாகத்தில் மாணவ-மாணவிகள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு குரங்கு ஒன்று திடீரென்று புகுந்தது. இதை கவனித்த பள்ளியின் தலைமை ஆசிரியர் இப்ராகிம், அந்த குரங்கிற்கு ஒரு தட்டில் சோறு மட்டும் வைத்து சாப்பிட கொடுத்துள்ளார்.

ஆனால் அந்த குரங்கு சாப்பிட மறுத்தது. இதையடுத்து சோறுடன் சாம்பார் ஊற்றி குரங்கிற்கு சாப்பிட கொடுத்தும் பார்த்தார். இருப்பினும் அந்த குரங்கு சாப்பிட மறுத்துள்ளது. இதையடுத்து தலைமை ஆசிரியரே சோற்றை பிசைந்து ஒரு குழந்தைக்கு தாய் ஊட்டிவிடுவது போல் குரங்கிற்கு சாப்பாடு கொடுத்துள்ளார்.

அப்போது தான் அந்த குரங்கு சாப்பாட்டை உண்ண தொடங்கியது. இவ்வாறு அவர் சாப்பாட்டை கையில் அள்ளி ஊட்டிவிட குரங்கு ருசித்து சாப்பிட்டுள்ளது. பின்னர் அந்த குரங்கு சமத்தாக எந்த இடையூறும் செய்யாமல் அங்கிருந்து சென்றுவிட்டது.

இந்த நிலையில் குரங்கிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் சாப்பாடு ஊட்டிய காட்சிகளை சக ஆசிரியர் ஒருவர் வீடியோவில் பதிவு செய்து சமூகவலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

பள்ளிக்கு வந்த குரங்கிற்கு அன்னமிட்ட அந்த தலைமை ஆசிரியரின் செயலுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!