ஆம்புலன்சை நிறுத்தி நோயாளிக்கு மது ஊற்றி கொடுத்த டிரைவர்!

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் பகுதியில் டிர்டோல் என்ற இடத்தில் சாலையோரத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் வாகனத்தை நிறுத்தி விட்டு, ஆம்புலன்சில் உள்ள நோயாளி ஒருவருக்கு மதுபானம் ஊற்றி கொடுக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றன.

ஆம்புலன்சில் இருக்கும் நோயாளி ஒரு காலில் கட்டு போடப்பட்ட நிலையில், ஸ்ட்ரெச்சரில் படுத்துக்கொண்டு மது அருந்துவது போன்று காட்சி உள்ளது. மேலும் ஆம்புலன்ஸ் டிரைவர் மதுபாட்டிலை திறந்து கிளாசில் மதுபானம் ஊற்றி நோயாளிக்கு கொடுத்துள்ளார். பின்னர் தானும் குடித்துள்ளார். சம்பவத்தின்போது பெண் மற்றும் சிறுவனும் உடன் இருந்துள்ளனர்.

வைரலாக பரவிய இந்த காட்சிகள் அங்கு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து சம்பவம் தொடர்பாக அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதில் வீடியோவில் இருக்கும் நோயாளி பெயர் நகுலே தெகுரி என்பது தெரியவந்தது. இவர் மரத்தில் இருந்து கீழே விழுந்ததில் காயம் அடைந்துள்ளார். அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்ற போதுதான் இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து ஆம்புலன்ஸ் டிரைவர் கூறும்போது, நோயாளி மதுபானம் வேண்டும் என விரும்பி கேட்டதாலேயே அவருக்கு கொடுத்ததாக கூறியுள்ளார். இதுதொடர்பாக ஜகத்சிங்பூர் தலைமை மாவட்ட மருத்து அதிகாரி டாக்டர் சேத்ரபாசிடாஷ் கூறுகையில், சம்பவம் நடந்தது தனியார் ஆம்புலன்ஸ்.

எனினும் இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. தவறு செய்த டிரைவர் மீது சம்பந்தப்பட்ட ஆர்.டி.ஓ. மற்றும் போலீஸ் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். டிர்டோல் போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஜூகல்கிஷோர்தாஸ் கூறுகையில், சம்பவம் தொடர்பாக முறையாக புகார் எதுவும் வரவில்லை. வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே உரிய விசாரணை நடத்தப்படும் என்று கூறினார்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!