ஆதரவின்றி தவித்த சிறுமியை விபசார தொழிலில் தள்ளிய 8 பேர் கும்பல்!

கரூர் அருகே தொழிற்பேட்டை பகுதியில் சிறுமியை வைத்து பாலியல் தொழில் செய்து வருவதாக பொதுமக்கள் மூலம் குழந்தைகள் நல அலுவலகத்திற்கு புகார் சென்றது.

இது குறித்து குழந்தைகள் நல அலுவலர் கனகவல்லி கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தார். அதன்பேரில் கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவின் பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு சம்பவ இடத்தில் ரகசிய விசாரணையை மேற்கொண்டனர்.

இதில் சிறுமியை விபசாரத்தில் ஈடுபடுத்திய சாந்தி (42), மேகலா (42), மாயா (45) ஆகிய 3 பெண் புரோக்கர்கள், மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட கார்த்தி (28), கார்த்திகேயன் (27), சந்தோஷ் (30), தன்னாசி என்ற சமுத்திரபாண்டி (27), கௌதம் (30) உள்ளிட்ட 8 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

பின்னர் நடத்தப்பட்ட விசாரணையில் கடந்த ஆறு மாதமாக அந்த சிறுமியை வைத்து அவர்கள் பாலியல் தொழிலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்த சம்பவத்தில் பல திடுக்கிடும் பின்னணி தகவல்கள் வெளியாகி உள்ளன. விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்பட்ட அந்த சிறுமிக்கு 16 வயது மட்டுமே ஆகிறது.

கரூர் வெங்கமேடு பகுதியைச் சேர்ந்த அந்த சிறுமியின் தாயார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். அதைத் தொடர்ந்து அவரது தந்தை வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து விட்டு சென்று விட்டார். இதனால் அந்த சிறுமி ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டார்.

இந்த நிலையில் உறவுக்கார பெண் மூலம் விபசார கும்பலிடம் சிறுமி சிக்கி உள்ளார். கரூர் மட்டுமல்லாமல் பல்வேறு இடங்களுக்கு அந்த சிறுமியை 3 பெண் புரோக்கர்களும் காரில் அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி வி.ஐ.பி.க்கள், அரசியல் புள்ளிகளுக்கு சப்ளை செய்திருக்கலாம் என கூறப்படுகிறது.

இதனால் விசாரணையை தீவிரப்படுத்த போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார். அதன்படி காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள அந்த சிறுமியிடம் போலீசார் வாக்குமூலத்தை பெற்று விரிவான விசாரணையை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

இதனால் மேலும் பலர் சிக்க உள்ளனர். 16 வயது சிறுமியை விபச்சாரத்தில் தள்ளி சீரழித்த சம்பவம் கரூரில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!