வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற தம்பியைப் பார்க்கச் சென்றவருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…!


நாகை அருகே வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற விவசாயி மர்மமான முறையில் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். காரைக்கால் மாவட்டம் ஊதியபத்து கிராமத்தை சேர்ந்தவர் வடிவேல்.

இவரது மகன் மகேந்திரன் (வயது 38). விவசாயி. மகேந்திரனுக்கும், அவரது அண்ணன் கந்தவேலுக்கும் சொந்தமான விவசாய நிலம் நாகை மாவட்டம் திட்டசேரி அருகே உள்ள அருள் மொழிதேவன் கிராமத்தில் உள்ளது.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு வயலுக்கு மின் மோட்டாரை இயக்கி தண்ணீர் பாய்ச்சுவதற்காக மகேந்திரன் புறப்பட்டு சென்றார். அப்போது அவர் கையில் டீசல் கேனும் எடுத்து சென்றிருந்தார்.

இதற்கிடையே வயலுக்கு சென்ற மகேந்திரன் பின்னர் வீடு திரும்பவில்லை. நீண்ட நேரமாக தம்பி வராததால் கந்தவேல், வயலுக்கு சென்று பார்த்துவர இன்று அதிகாலை புறப்பட்டு சென்றார்.

வயலுக்கு சென்று பார்த்த போது, நரிதின்ன வாய்க்கால் என்ற இடத்தில் உள்ள வாய்க்கால் கரையோரத்தில் மகேந்திரன் முகம் எரிந்த நிலையில் பிணமாக கிடந்தார்.

இதை கண்டு கந்தவேல் அதிர்ச்சி அடைந்தார். மகேந்திரன் தலையில் பின்பக்கம் வெட்டுக்காயம் இருந்தது. இதையடுத்து அவர் திட்டசேரி போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) குலோத்துங்கன், சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை, மகாதேவன் ஆகியோர் விரைந்து சென்று மகேந்திரன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

இதில் நள்ளிரவில் மர்ம கும்பல் மகேந்திரனை வெட்டிக்கொன்று விட்டு பின்னர் முகத்தை டீசல் ஊற்றி எரித்து இருக்கலாம் என போலீசார் சந்தேகித்து வருகிறார்கள்.

பின்னர் மகேந்திரன் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மகேந்திரன் முன் விரோதத்தில் எரித்து கொல்லப்பட்டாரா? அல்லது வேறெதும் காரணமா? என்று போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

நாகையில் இருந்து மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது. அது சிறிதுதூரம் ஓடிவிட்டு நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதனால் கொலையாளிகள் மோட்டார் சைக்கிள் அல்லது காரில் தப்பி சென்றிருக்கலாம் என தெரிகிறது.

கொலையுண்ட மகேந்திரனுக்கு கீதா என்ற மனைவியும், கோமதி (8), அனுஷ்கா (5) என்ற 2 மகள்களும் உள்ளனர். வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச சென்ற போது விவசாயி எரித்து கொன்ற சம்பவம் திட்டசேரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. – Source : maalaimalar.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!