மண்எண்ணெய் ஊற்றி மனைவியை தீ வைத்து எரித்த ரெயில்வே ஊழியர்..!

சென்னை அயனாவரம் தாகூர் நகர் 3-வது தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (வயது 75). இவர் ரெயில்வேயில் உள்ள ஐ.சி.எப்.-ல் கார்பெண்டராக வேலை செய்து ஓய்வு பெற்றவர்.

இவரது மனைவி பத்மாவதி (65). இவர்களுக்கு மகேஸ்வரி (50), குமார் (46), ஷகிலா (44) மற்றும் கார்த்திக் (40) ஆகிய 4 பிள்ளைகள் உள்ளனர். பிள்ளைகள் அனைவருக்கும் திருமணமாகி தனித்தனியாக குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.

கருணாகரனும், பத்மாவதியும் அயனாவரத்தில் தனியாக வசித்து வந்தனர். பத்மாவதிக்கு லேசாக மனநிலை பாதிப்பு இருப்பதாக கூறப்படும் நிலையில், கருணாகரன் மனைவி பத்மாவதியை பராமரித்து வந்ததாக தெரிகிறது.

கருணாகரனும் வயது முதிர்வு காரணமாக மனைவியை பராமரிக்க முடியாமல் சிரமமடைந்து வந்துள்ளார்.

இதையடுத்து நேற்று முன்தினம் இரவு கதவை பூட்டிக்கொண்டு இரவு தூங்க சென்ற நிலையில், கருணாகரன் பத்மாவதி மீது திடீரென தீப்பற்றிக்கொண்டதில் ஏற்பட்ட அலறலில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துள்ளனர்.

அப்போது கதவு உள்தாழ்ப்பாள் போட்டு இருந்த நிலையில், உடனடியாக அயனாவரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

பின்னர் போலீசார் விரைந்து வந்து பொதுமக்கள் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, கணவன், மனைவி இருவரும் உடல் கருகிய நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தனர்.

பின்னர், இருவரையும் மீட்ட போலீசார், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இதற்கிடையே நேற்று மதியம் பத்மாவதி சிகிச்சை பலனின்றி ஆஸ்பத்திரியில் உயிரிழந்தார். கருணாகரன் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், கருணாகரன் மனைவி பத்மாவதி மீது மண்எண்ணையை ஊற்றி தீ வைத்துள்ளார். அப்போது வலிதாங்க முடியாமல் பத்மாவதி ஓடிச்சென்று கருணாகரனை கட்டிபிடித்ததில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது தெரியவந்ததுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இது தொடர்பாக அயனாவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!