ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட கைதி மாடியிலிருந்து விடுதலையான சம்பவம்…!


மந்திராலயா கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து குதித்து ஆயுள் தண்டனை கைதி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மராட்டிய அரசின் தலைமை செயலகமான மந்திராலயா மும்பை நரிமன்பாயிண்டில் உள்ளது. மாநில அரசின் செயல்பாடுகள் நடைபெறும் தலைமை செயலக கட்டிடம் தற்கொலை செய்து கொள்ளும் களமாக மாறி வருகிறது.

கடந்த மாதம் மந்திராலயாவில் தர்மா பாட்டீல் என்ற விவசாயி விஷம் குடித்தார். பின்னர் அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

2 நாட்களுக்கு முன்னர் இங்கு அவினாஷ் என்ற வாலிபர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு முன் மந்திராலயா கட்டிடத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி இருக்கின்றன.

இந்தநிலையில், நேற்று மந்திராலயா கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து ஒருவர் உயிரை மாய்த்து கொண்டார். நேற்று மாலை மந்திராலயாவிற்கு வந்த அந்த நபர் 5-வது மாடிக்கு சென்றார்.

அடுத்த சில நொடிகளில் திடீரென கீழே குதித்துவிட்டார். இதில், அவர் படுகாயம் அடைந்து ரத்தவெள்ளத்தில் துடித்தார். இதை பார்த்து மந்திராலயா அதிகாரிகள், ஊழியர்கள் என அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர்.


இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் போலீசார் விரைந்து வந்து அவரை மீட்டனர். உடனடியாக அவர் ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ் விசாரணையில், அவர் மும்பை செம்பூரை சேர்ந்த ஹர்ஷல் ராவ்தே (வயது 45) என்பது தெரியவந்தது.

இதற்கிடையே கல்வித்துறை மந்திரி வினோத் தாவ்டே, சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ராதாகிருஷ்ண விகே பாட்டீல், தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் தனஞ்செய் முண்டே ஆகியோர், மந்திராலயா வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், ஹர்ஷல் ராவ்தே அவரது உறவுக்கார பெண்ணின் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறைக்கு சென்று, தற்போது பரோலில் வெளியே வந்துள்ளார்.

பரோல் விடுப்பை நீட்டிக்க கோரி மனு கொடுக்க மந்திராலயா வந்தபோது திடீரென ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

மந்திராலயா கட்டிடத்தில் இருந்து ஒருவர், கீழே குதித்து தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. – Source : dailythanthi.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!