காலங்களில் அவள் வசந்தம் திரைவிமர்சனம்!

கதாநாயகன் கவுசிக் ராம் ஒரு ஐ.டி. கம்பெனியில் வேலை செய்கிறார். இவரது குடும்பம் உயர் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த குடும்பம். வீட்டிற்கு செல்லப்பிள்ளையான கவுசிக் திரைப்படங்கள் பார்ப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் காதல் என்பதே திரைப்படங்களில் வருவது தான், அதுமாதிரியான ஒரு வாழ்க்கையை தான் நாம் வாழ வேண்டும் என்று நினைக்கிறார்.

ஒரு பெண்ணை எப்படி காதலிக்க வேண்டும் என்பதை எழுதி வைத்து சில பெண்களை காதலிக்கிறார். ஒரு கட்டத்தில் அது சரியில்லாமல் காதலில் முறிவு ஏற்படுகிறது. அப்போது கவுசிக் அப்பாவின் நெருங்கிய நண்பரின் மகள் அஞ்சலி நாயர் தன் குடும்பத்தோடு கவுசிக் வீட்டிற்கு வருகிறார்.

கவுச்சிக்கை பார்த்ததும் அஞ்சலி காதல் வயப்படுகிறார். தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு கவுசிக்கிடம் நேரடியாக அஞ்சலி கேட்க இருவருக்கும் திருமணம் நடைபெறுகிறது. ஒரு கட்டத்தில் கவுசிக்கின் பழைய வாழ்க்கை அஞ்சலிக்கு தெரிய வருகிறது. இதனால் விரக்தியடைந்த அஞ்சலி கவுசிக்கை பிரிய நினைக்கிறார்.

இறுதியில் கவுசிக்கின் வாழ்க்கை என்னானது? படங்களை எடுத்துக்காட்டாக வைத்து காதல் செய்த அவரது காதல் கைக்கூடியதா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை. கதாநாயகன் கவுசிக் அறிமுக நடிகர் என்றாலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.

பெண்களை சுற்றித் திரியும் ஒரு இளைஞன் என்ன என்ன செய்வார்களோ அதை ரசனையுடன் கொடுத்திருக்கிறார். கதாநாயகி அஞ்சலி நாயர் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இரண்டாவது நாயகி ஹெரோஷினி சில காட்சிகளில் வந்தாலும் உண்மையான காதல் என்ன என்பதை தன் கதாபாத்திரம் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அறிமுக இயக்குனர் ராகவ் மிர்தத் படக்குழுவினரை சரியாக பயன்படுத்தியுள்ளார். கேண்டில் லைட் டின்னர், கிரீட்டிங் கார்ட் என 90’ஸ் 2கே கிட்ஸ்களின் காதலை கண்முன் நிறுத்தியுள்ளார். இந்த காலத்து காதல் எப்படி இருக்க வேண்டும் என்பதை இந்த படத்தின் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார்.

ஹரி எஸ் ஆர் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார்தான். கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் ‘காலங்களில் அவள் வசந்தம்’ – ஓவியம்-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!