தூங்கிக் கொண்டிருந்த தாயை கல்லால் அடித்து கொன்ற 14 வயது சிறுவன்!

ஈரோட்டில் 14 வயது சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த தாயை கல்லால் அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி அருகே உள்ள சுங்ககாரன் பாளையத்தை சேர்ந்தவர் யுவராணி (36). புஞ்சை புளியம்பட்டி மின்சார வாரிய அலுவலகத்தில் வணிக ஆய்வாளராக பணிபுரிந்து வருகின்றார். இவரது கணவர் அருட்செல்வன் ஒப்பந்ததாரராக பணிபுரிந்து வருகின்றார்.

அருட்செல்வன் கோயமுத்தூரில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவர்களுக்கு 14 வயதில் ஒரு மகனும், 12 வயதில் ஒரு மகளும் உள்ளனர். மகன் தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 9-ம் வகுப்பு படித்து வருகின்றார்.

மகள் தனியார் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 4 நாட்களுக்கு முன் பள்ளி விடுதியில் இருந்து வீட்டுக்கு வந்த மகன் நேற்று இரவு 8 மணி அளவில் விடுதிக்கு செல்ல மாட்டேன் என கூறி தாயார் யுவராணி இடம் சண்டைபோட்டு உள்ளார். தாயார் யுவராணி காலை அப்பா வந்ததும் பள்ளிக்கு செல்லலாம் என கூறி சமாதானம் செய்து உள்ளார். இதன்பின் தாயும் மகனும் சமாதானமாகி தூங்க சென்றுள்ளனர்.

இந்நிலையில் நள்ளிரவு 2 மணி அளவில் தனது தாயார் யுவராணி மீது ஹாலோ பிளாக் கல் மற்றும் பூந்தொட்டி ஆகியவற்றைக் கொண்டு மகன் தலையில் பலமாக தாக்கி உள்ளார். இதில் படுகாயம் அடைந்த யுவராணி அலறி சத்தம் போட்டு உள்ளார். அண்ணன் தாயை தாக்குவதைக் கண்டு பயந்து போன மகள் சத்தும் போட்டுள்ளார்.

இந்த சத்தம் கேட்டு வீட்டின் அருகே உள்ள உறவினர்கள் ஓடிவந்தனர். இதனை அறிந்த மகன் அங்கிருந்து தப்பியோடி உள்ளார். பின்னர், படுகாயம் அடைந்த யுவராணியை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் யுவராணி பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து யுவராணியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். தாயை கல்லால் தாக்கி கொலை செய்த சிறுவனை போலீசார் தேடி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!