குளியலறையில் எமனாக மாறிய ஹீட்டர்… கதறிய மகள்… பதறி ஓடிய தாய்!

கோவையில் குளியல் அறையில் நடந்த மின் கசிவால் மகளும், தாயும் அடுத்தடுத்து பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


கோவை மாநகரை அடுத்த துடியலூர் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்.

இவர் திருச்சியில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார். கோவையில் உள்ள வீட்டில் அவரது மனைவி கார்த்திகா (52) மற்றும் மகள் அர்ச்சனா(18) ஆகியோர் வசித்து வருகின்றனர். இதில் அர்ச்சனா கோவையை சேர்ந்த தனியார் கல்லூரி ஒன்றில் முதலாம் ஆண்டு இளங்கலை பட்டம் படித்து வருகிறார்.

இந்த நிலையில் இன்று காலை அர்ச்சனா கல்லூரி செல்வதற்காக தயாராகியுள்ளார். இதையொட்டி குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றுள்ளார். அப்போது வாட்டர் ஹீட்டரில் எதிர்பாராத விதமாக மின் கசிவு ஏற்பட்டுள்ளது. இது பக்கத்தில் இருந்த தண்ணீரில் பாய்ந்துள்ளது. தண்ணீரை தொட்ட அர்ச்சனாவிற்கு எலக்ட்ரிக் ஷாக் அடித்துள்ளது. இதனால் அலறி துடித்துள்ளார்.

சத்தம் கேட்டு சமையலறையில் இருந்து அவரது அம்மா கார்த்திகா ஓடி வந்துள்ளார். அவர் தனது மகளை காப்பாற்ற உள்ளே வந்த போது அவருக்கும் ஷாக் அடித்தது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் அர்ச்சனாவை அழைத்துச் செல்வதற்காக கால் டாக்ஸிகாரர் வீட்டின் அருகே வந்துள்ளார். அவர் காலிங் பெல் மற்றும் செல்போன் மூலம் அழைத்தும் பலனில்லை.

யாரும் போன் எடுக்கவில்லை. கதவும் திறக்கப்படவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்த போது, பாத்ரூமில் இருவரும் இறந்து கிடந்தது தெரியவந்தது. உடனடியாக மின்சாரத்தை துண்டித்தவர்கள் துடியலூர் போலீசில் தகவல் தெரிவித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த துடியலூர் போலீசார் இறந்தவர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாட்டர் ஹீட்டரில் மின் கசிவு ஏற்பட்டு எலக்ட்ரிக் ஷாக் அடித்து தாயும், மகளும் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!