இசைப்புயல்ன்னா சும்மாவா.. 11 நிமிடத்தில் ஏ.ஆர். ரஹ்மான் செய்த சாதனை!

இசைபுயல் ஏ.ஆர். ரஹ்மானின் நேரடி இசை கச்சேரி மலேசியாவின் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர் ரஹ்மான் உலகளவில் பிரபலாமானவர். இதுவரை 145 படங்களுக்கு மேல் இசையமைத்துள்ள இவர், 6 தேசிய விருது, 2 ஆஸ்கர் விருது உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.

இந்திய மொழிகளை தாண்டி பல மொழிகளில் பணியாற்றிவரும் ஏ.ஆர் ரஹ்மான் இசையில் அண்மையில் தமிழில் ‘கோப்ரா’, ‘வெந்து தணிந்தது காடு’ படங்கள் வெளியானது. இந்த படங்களில் ஏ.ஆர். ரஹ்மானின் இசை ரசிகர்களால் கொண்டாடி தீர்க்கப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகிவுள்ள ‘பொன்னியின் செல்வன்’ படத்திற்கு இசையமைத்துள்ளார் ஏ.ஆர். ரஹ்மான்.

இந்தப்படம் வரும் 30 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படங்களுக்கு இசையமைப்பதுடன் நேரடி இசை கச்சேரிகளையும் நடத்தி வருகிறார். அண்மையில் கனடா நாட்டிற்கு சென்று இசை நிகழ்ச்சி நடத்திவிட்டு இந்தியா திரும்பினார் ஏ.ஆர். ரஹ்மான்.

இந்நிலையில் சீக்ரெட் ஆப் சக்சஸ் என்ற பெயரில் மலேசியாவின் கோலாலம்பூரில் அடுத்த ஆண்டு ஜனவரி 28 ஆம் தேதி ஏ. ஆர். ரஹ்மான் இசைநிகழ்ச்சி நடைபெறவுள்ளது. டி.எம்.ஓய். கிரியேஷன்ஸ் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கும் இந்த நிகழ்ச்சிக்கான 10,000 டிக்கெட்டுகளும் 11 நிமிடத்தில் விற்று தீர்ந்துள்ளது.

இந்த நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை கடந்த வாரம் 10000 அடி உயரத்தில் வானில் பறந்தபடி பாராச்சூட்டில் இருந்து குதித்து விளம்பரம் செய்தனர். இந்நிலையில் இந்த இசை நிகழ்சசிக்கான டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய சில நிமிடங்களில் விற்றுத்தீர்ந்துள்ளது ரசிகர்கள் மத்தியில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!