உணவில் விஷம் கலந்து தாயை கொன்று நாடகமாடிய மகள்…. பகீர் காரணம்!

கேரளாவில் சொத்தை அபகரிக்க ஆசைப்பட்டு, தாயை உணவில் விஷம் வைத்து கொன்ற மகளை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் தந்தையையும் கொல்ல முயன்றது அம்பலமானது.

இந்த பயங்கர சம்பவம் பற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:- கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள குன்னம்குளம் பகுதியை சேர்ந்தவர் சந்திரன். இவருடைய மனைவி ருக்மினி (வயது 58). இவர்களுக்கு இந்துலேகா (36) உள்பட 2 மகள்கள் உள்ளனர். இந்துலேகாவின் கணவர் துபாயில் வேலை பார்த்து வருகிறார்.

கணவனுக்கு தெரியாமல் இந்துலேகா ரூ.8 லட்சம் மதிப்பிலான நகைகளை வங்கியில் அடகு வைத்து ஜாலியாக செலவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த நகைகளை மீட்க முடியாமல் அவர் சிரமப்பட்டார். இதற்கிடையே வெளிநாட்டில் உள்ள கணவர் விரைவில் ஊருக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.

கணவர் இங்கு வந்து நகையை பற்றி கேட்டால் என்ன செய்வது என புலம்பியுள்ளார். அப்போது அவருக்கு ஒரு யோசனை வந்துள்ளது. பெற்றோர் பெயரில் உள்ள சொத்துகளை விற்று நகைகளை திருப்பி விடலாம் என நினைத்தார். அதன்படி தாயிடம் சென்று சொத்தை தன்னுடைய பெயருக்கு எழுதித்தருமாறு கேட்டுள்ளார்.

அதற்கு தாயார் மறுத்துவிட்டார். இதனால் ஏமாற்றம் அடைந்த இந்துலேகாவுக்கு பெற்ற தாய் மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது. அவரை கொல்லவும் துணிந்தார். அதன்படி கடந்த 2 நாட்களுக்கு முன்பு ருக்மினிக்கு இந்துலேகா உணவில் விஷம் கலந்து கொடுத்தார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் ருக்மினி மயங்கி விழுந்துள்ளார்.

பின்னர் ருக்மினியை திருச்சூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று இந்துலேகா சேர்த்தார். அங்கு, தன்னுடைய தாய் சாப்பிட்டுக்கொண்டு இருந்தபோது திடீரென மயக்கம் போட்டு விழுந்துவிட்டதாகவும், அவரை காப்பாற்றுமாறும் நாடகமாடியுள்ளார்.

தொடர்ந்து டாக்டர்கள் பரிசோதித்த போது ருக்மினியின் உடலில் விஷம் கலந்து இருந்தது தெரிய வந்தது. இதற்கிடையே சுயநினைவின்றி இருந்த ருக்மினியும் இறந்தார்.இது குறித்து டாக்டர்கள் குன்னங்குளம் போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக இந்துலேகாவிடம் விசாரித்தனர்.

அப்போது அவருடைய நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழுந்ததால் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். இதில் இந்துலேகா தான் தாய் ருக்மினிக்கு உணவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில் தாயை மட்டுமின்றி தனது தந்தையையும் விஷம் கொடுத்து கொல்ல முயன்றது தெரியவந்தது.

தந்தை சந்திரனுக்கு டீயில் விஷத்தை கலந்து கொடுத்துள்ளார். அதை வாங்கி குடித்தவருக்கு சுவையில் வித்தியாசம் தெரிந்ததால் டீயை முழுமையாக குடிக்கவில்லை. இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். பெற்ற தாயை கொன்று மகள் நாடகமாடிய சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!