பள்ளி மாணவியின் முடிவால் அதிர்ச்சியில் குடும்பம்!

பெங்களூருவில் பெற்றோர் ஷாப்பிங் அழைத்து செல்லவில்லை என்று பள்ளி மாணவி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் மட்டுமில்லாமல் மற்ற மாநிலங்களிலும் பள்ளி மாணவ, மாணவிகள் சர்வ சாதாரணமாக தற்கொலை செய்துகொள்ளும் நிகழ்வுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. மேலும், அவர்களது தற்கொலைக்கு பின்னால் கூறப்படும் காரணங்கள் பேரிடியை கொடுப்பதாகவே உள்ளது. அந்த வகையில் இந்த சம்பவமும் அதிர்ச்சிகரமாக உள்ளது.

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை அடுத்த சாமராஜ்பேட்டை பகுதியைச் சேர்ந்த தம்பதிக்கு மூன்று குழந்தைகள். இதில் மூத்த மகள் பெயர் வைஷாலி (11). இந்த சிறுமி அப்பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5 ஆம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 20 ஆம் தேதி அன்று வைஷாலியின் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பு நடந்தது. வைஷாலியின் தந்தை குடும்பமாக பள்ளிக்கு சென்றுவிட்டு பின்னர் அனைவரும் வீட்டுக்கு வந்தனர்.

இதனையடுத்து, தம்பதி இருவரும் வைஷாலியை மட்டும் வீட்டில் இருக்க சொல்லிவிட்டு மற்ற இரண்டு குழந்தைகளுடன் ஷாப்பிங் செல்ல தயாராகினர். அப்போது, வைஷாலி நானும் வருகிறேன் என்று தந்தையிடம் கூறினார். ஆனால், அவர்கள் சிறுமியை வீட்டிலேயே விட்டுவிட்டு கிளம்பி சென்றுவிட்டனர். இதனால் ஏற்பட்ட விரக்தியில் வைஷாலி வீட்டில் உள்ள அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தம்பதி இருவரும் ஷாப்பிங் சென்று விட்டு வீட்டுக்கு வந்து பார்த்தபோது வைஷாலி மின்விசிறியில் தூக்கு போட்டு இறந்து கிடப்பதை கண்டு கதறி அழுதனர். பின்னர் சம்பவம் அறிந்து வந்த சாமராஜ்பேட்டை காவல்துறையினர் வைஷாலியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்கொலை என்பது எதற்கும் தீர்வல்ல… யாரேனும் மனநலப் பிரச்சினைகளை எதிர்கொண்டாலோ அல்லது தற்கொலை எண்ணம் இருப்பது பற்றி உங்களுக்குத் தெரிய வந்தாலோ தயவுசெய்து மாநில சுகாதாரத் துறையின் உதவி எண்: 104 அல்லது ‘சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள்-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!