எரிந்த நிலையில் கிடந்த பெண் தூய்மை பணியாளர் உடல்..!

மணலி புதிய மேம்பாலம் அருகே உடல் எரிந்த நிலையில் தூய்மை பணியாளர் உயிரிழந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை திருவொற்றியூர் பூங்காவனபுரம் 1வது தெருவில் வசித்து வருபவர் மணிமாறன்(வயது 35). இவர் தேனாம்பேட்டையில் உள்ள அப்பார்ட்மெண்ட்டில் வேலை செய்து வருகிறார். வாரத்திற்கு ஒரு நாள் வீட்டிற்கு வந்து செல்வாராம். இவரது மனைவி மைதிலி (வயது 34) இவர் சென்னை மாநகராட்சி திருவொற்றியூர் மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த 3-ம் தேதி எர்ணாவூர் சுனாமி குடியிருப்பில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு சென்று விட்டு தன்னுடன் வேலை செய்யும் ஜெய்சங்கர் என்பவரோடு மோட்டார் சைக்கிளில் திருவொற்றியூர் எல்லையம்மன் கோவில் அருகே வந்து இறங்கி உள்ளார்.

அப்போது மைதிலியை பார்த்த அவரது கணவர் மணிமாறன் இரண்டு பேரும் எங்கே சுற்றி விட்டு வருகிறீர்கள் என கேட்டு மனைவியிடம் தகராறு செய்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக மைதிலியை காணவில்லை என்று தெரிகின்றது. கணவர் மணிமாறன் உறவினர்களுடன் சேர்ந்து மனைவியை தேடி பார்த்துள்ளார். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதனால் கடந்த 5-ம் தேதி இதுகுறித்து திருவொற்றியூர் போலீஸ் நிலையத்தில் கணவர் மணிமாறன் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் மணலி புதிய மேம்பாலம் அருகே உடல் எரிந்த நிலையில் மைதிலி உடல் கிடந்துள்ளது. அதனை பார்த்து அதிர்ச்சி அடைந் பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த மணலி போலீசார் தூய்மை பணியாளர் மைதிலியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டாலி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து கணவர் மணிமாறனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!