தலைப்பிரசவமா..? கவலையை விட்டு இத மட்டும் ஒரு முறை படிங்க..!


கர்ப்ப காலத்தை சுகமாகக் கையாள்வதென்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. அதிலும் தலைப்பிரசவம் என்றால் சொல்லவே தேவையில்லை. தலைப்பிரசவத்தின் போது தான் ஒரு பெண்ணுக்கு அவளது கணவன் மற்றும் குடும்பத்தவர்களின் ஆதரவு தேவை.

பிரசவ காலத்தின் போதான பராமரிப்பு, பிரசவத்தின் பின்னரான பராமரிப்பு, பாலூட்டல் மற்றும் அதற்கு உகந்த உணவு வகைகளை உட்கொள்ளல் என்பன தொடர்பில் நாம் கட்டாயம் அறிந்திருத்தல் அவசியம். இருப்பினும், எம்மை அறியாது ஒரு சில தவறுகள் ஏற்படுவதுண்டு. அது போன்ற தவறுகளை நாம் எவ்வாறு தவிர்ப்பது என பார்ப்போம்.


ஆசனப்பட்டி
வாகனத்தில் பயணிக்கும் போது ஆசனப்பட்டியை அணிவதால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என நினைத்து பல தாய்மார்கள் ஆசனப்பட்டி அணிவதை தவிர்க்கிறார்கள். ஆனால் விபத்து ஏற்படுமிடத்து, வயிற்றில் உள்ள குழந்தையின் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம் என்பதை நாம் மனதிலிருத்திக்கொள்ளவேண்டும். இது தொடர்பான மேலதிக விடயங்களுக்கு மகப்பேற்று மருத்துவரை நாடவும்.

அளவுக்கு அதிகமான உணவு
பிரசவ காலத்தில் அதிகூடிய புரோட்டின்கள் மற்றும் விற்றமின்கள் உள்ளடங்கலாக சுமார் 300 கலோரிகள் கொண்ட மேலதிக உணவு உள்வாங்கப்பட வேண்டும். எனினும் தாய் மற்றும் சேயின் நலன் கருதி சில தாய்மார்கள் அளவுக்கு அதிகமான உணவை உட்கொள்கின்றனர். அதனால் உடல் பருமன், உயர் இரத்த அழுத்தம் மற்றும் கர்ப்பகால நீரிழிவு போன்ற நிலைமைகளுக்கு முகங்கொடுக்க நேரிடுகிறது.


காலை உணவு
பல தாய்மார்கள் கர்ப்ப காலத்தில் காலை உணவை தவிர்க்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான விடயம். மூன்று வேளை உணவும் அவ்வப்போது பசி ஏற்படும் போது உணவுட்கொள்வதும் கட்டாயமான விடயமாகும்.

மருந்து வகைகளை கருவுற்றவுடன் நிறுத்துதல்
சில பெண்கள் தாம் கருவுற்றவுடன் அவர்கள் உட்கொண்டு வரும் மருந்து வகைகளை உடனடியாக நிறுத்தி விடுவர். ஆனால் அது முற்றிலும் தவறான விடயமாகும். ஏனெனில், நீரிழிவு மற்றும் உளவியல் நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் தாம் உட்கொண்டு வரும் மருந்து வகைகளை தொடர்ந்தும் உட்கொள்ள வேண்டும். குறித்த மருந்துகளை வைத்தியர் ஆலோசனையின்றி நிறுத்துதல் கூடாது.


சிசேரியன் அறுவை சிகிச்சை
தற்காலத்து தாய்மார்கள் இயற்கை பிரசவத்தை விட சிசேரியன் அறுவைச் சிகிச்சையையே விரும்புகின்றனர். தவிர்க்க முடியாத காரணங்களால் மாத்திரமே சிசேரியன் சிகிச்சையை தெரிவு செய்ய வேண்டும். ஏனெனில் சிசேரியன் சிகிச்சை மேற்கொண்டால் குறைந்தது ஒரு மாத காலம் படுக்கையில் இருந்தவாறு ஓய்வு பெற வேண்டும். சில சமயங்களில் குழந்தைக்கு பாலூட்டுவதிலும் சிக்கல்கள் ஏற்படலாம். மேலும் சிசேரியன் செய்து கொண்ட தாய் ஒருவருக்கு தோற்று ஏற்படுவதற்கும் வாய்ப்பு உண்டு.

உடற்பயிற்சி
பிரசவத்திற்கு ஏற்றாற் போல் உடலை தயார் செய்ய சில உடற்பயிற்சிகளும் அத்தியாவசியமாகின்றன. அதனால் வைத்தியரை அணுகி எவ்வகையான உடற்பயிற்சிகள் தேவை என கேட்டறிதல் அவசியம்.

மன அழுத்தம்
கருவுற்ற தாய்மார்களை பாதிக்கும் மற்றொரு விடயம் மன அழுத்தம். தாய் ஒருவர் கர்ப்ப காலத்தில் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருப்பின் அவர் போசாக்கான உணவுகளை உட்கொண்டாலும் அதிலிருந்து பெறப்படும் சத்துக்களை அவரது உடல் உள்வாங்க மறுக்கும் நிலை ஏற்படும்.-© tamilvoicenews.com | All Rights Reserved

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி