கத்தியுடன் வந்த முகமூடி கொள்ளையனை துண்டால் விரட்டிய வீரப்பெண்!

கத்தியுடன் வந்து திருட முயன்ற முகமூடி கொள்ளையனை துண்டால் முறுக்கி விரட்டிய வீரப்பெண்ணுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது. அவரது பெயர் லடீப்பென்கர். இவர் நெதர்லாந்து நாட்டில் டெலேண்ட்டர் என்ற இடத்தில் சொந்தமாக பேக்கரி வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று காலையில் இவர் வழக்கம் போல கடையை திறந்து ஒரு துண்டால் அங்கிருந்த பொருட்களை துடைத்துக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென ஒரு முகமூடி கொள்ளையன் கத்தியுடன் கடைக்குள் நுழைந்தான்.

இதை பார்த்த லடீப்பென்கர் சற்று பின் வாங்கினார். இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த கொள்ளையன் கடையின் கல்லா பெட்டியை திறந்து அதில் இருந்த பணத்தை எடுக்க தொடங்கினான்.

அப்போது தான் லடீப்பென்கருக்கு ஒரு யோசனை தோன்றியது. தான் துடைப்பதற்காக கையில் வைத்து இருந்த துண்டை முறுக்கி மின்னல் வேகத்தில் அந்த திருடனை தாக்க தொடங்கினார். இதனால் கொள்ளையன் கையில் இருந்த கத்தி கீழே விழுந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட லடீப்பென்கர் அவனது கழுத்தை துண்டை சுற்றி இறுக்கினார்.

இதனால் உயிருக்கு பயந்த மர்ம மனிதன் உயிர் தப்பினால் போதும். பணமும் வேண்டாம். ஒன்றும் வேண்டாம் என நினைத்து அந்த பெண்ணின் பிடியில் இருந்து விடுபட்டு அங்கிருந்து ஓடியே விட்டான். அதன் பிறகு தான் லடீப்பென்கருக்கு நிம்மதி பெருமூச்சு வந்தது.

இந்த காட்சிகள் அனைத்தும் கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவாகின. இது தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் என்ற பழ மொழிக்கு ஏற்ப துணிச்சலுடன் செயல்பட்ட வீரப்பெண் லடீப்பென்கரை சமூக வலை தளங்களில் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!