உக்ரைனின் பணக்கார தொழிலதிபர் – மனைவி ரஷிய தாக்குதலில் பலி!

உக்ரைனின் ஹீரோ விருது வாங்கிய பணக்கார தொழிலதிபரான ஒலெக்சி வடாதுர்ஸ்கை மற்றும் அவரது மனைவி ரஷிய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர்.

உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போரானது 5 மாதங்களை கடந்து தொடர்ந்து வருகிறது. உக்ரைன் மற்றும் ரஷியா ஆகிய இரு நாடுகளும் கோதுமை உள்ளிட்ட தானிய ஏற்றுமதியில் முன்னிலை வகிக்கின்றன. இந்த சூழலில், இரு நாடுகள் இடையேயான போரால் உணவு பொருட்களின் விலைவாசி உலக அளவில் உயர்ந்து உள்ளது. இந்நிலையில், உக்ரைனின் தெற்கு நகரான மிகோலைவ் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது.

இதில், உக்ரைனின் ஹீரோ விருது வாங்கியுள்ள அந்நாட்டின் பணக்கார தொழிலதிபரான ஒலெக்சி வடாதுர்ஸ்கை (வயது 74) மற்றும் அவரது மனைவி ரெய்சா ஆகிய இருவரும் வீட்டில் இருக்கும்போது, ரஷிய ஏவுகணை தாக்குதலில் உயிரிழந்து உள்ளனர். ஒலெக்சி, தானிய ஏற்றுமதிக்கான நிபுலான் என்ற நிறுவனமும் நடத்தி வருகிறார்.

ஒலொக்சியின் நிபுலான் நிறுவனம் தான் உக்ரைனின் மிகப்பெரிய தானிய ஏற்றுமதி நிறுவனமாகும். கோதுமை, சோளம் உள்பட பல்வேறு தானியங்களை இந்த நிறுவனம் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. இந்நிலையில், அவரது மறைவு நாட்டுக்கு பேரிழப்பு என அதிபர் ஜெலன்ஸ்கி வருத்தம் தெரிவித்து உள்ளார். எனினும், மிகோலைவ் நகர மேயர் அலெக்சாண்டர் சென்கெவிச் கூறும்போது, ரஷியாவின் மிக பெரிய தாக்குதல் இது என குறிப்பிட்டார்.

அதிபரின் ஆலோசகர் மிகைலோ பொடோலியாக் கூறும்போது, உள்நோக்கத்துடனேயே தொழிலதிபரை இலக்காக கொண்டு ரஷியா தாக்குதல் நடத்தி உள்ளது. தொழிலதிபரின் படுக்கையறையை ஏவுகணைகளில் ஒன்று தாக்கி உள்ளது. இதனை வைத்து பார்க்கும்போது, இது திட்டமிட்ட தாக்குதல் என சந்தேகமின்றி தெரிய வருகிறது என கூறியுள்ளார். ரஷியாவின் ஏவுகணை தாக்குதலில் ஓட்டல் ஒன்று, விளையாட்டு வளாகம், 2 பள்ளி கூடங்கள் மற்றும் பல வீடுகளும் சேதமடைந்து உள்ளன.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!