தாலி கட்டியவுடன் மாரடைப்பு… மணமகனுக்கு நேர்ந்த சோகம்!

தாலி கட்டிய பின் நடந்த திருமண வரவேற்பில், மாரடைப்பு ஏற்பட்டதால் மணமகன் உயிரிழந்தார். இதனால் மணமகள் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர்.


கர்நாடக மாநிலம், விஜயநகரா ஹொஸ்பேட் அருகே உள்ள பாபிநாயகனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹொன்னுாரா சுவாமி, 26. இவருக்கு நேற்று காலை, இங்குள்ள சுடுகாடப்பா கோவிலில் திருமணம் நடந்தது.

தாலி கட்டிய பின் அங்கேயே வரவேற்பு நிகழ்ச்சிநடந்தது.உறவினர்கள் பரிசு பொருட்கள் கொடுத்து மணமக்களுடன் போட்டோ எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது, மணமகனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்தார். வரவேற்பு மேடையில் அங்கும், இங்குமாக நடந்தார்.

இதைப் பார்த்த உறவினர்களோ, ‘அங்கும் இங்குமாக ஏன் செல்கிறாய்; ஒரே இடத்தில் நில்’ என, திட்டினர். அப்போது அவர், தனக்கு நடிகர் புனித் ராஜ்குமாருக்கு ஏற்பட்டதை போலவே நெஞ்சு வலிக்கிறது என்றார்.
உடனடியாக அங்கிருந்தோர், வாயு கோளாறாக இருக்கும் என நினைத்து, சோடா கொண்டு வந்து கொடுத்தனர். அதை குடித்தவர், வாந்தி எடுத்தார். உடனடியாக அவரை, அருகில் உள்ள கிளினிக்குக்கு அழைத்து சென்றனர்.

அங்குள்ள டாக்டர் பரிசோதித்து விட்டு, உடனடியாக ஹொஸ்பேட் கொண்டு செல்லுமாறு கூறினார். அங்கு செல்லும் வழியில், அவர் உயிரிழந்தார். இதனால், மணமகள் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்துள்ளனர். திருமணத்துக்கு வந்திருந்த உறவினர்கள் சோகம் அடைந்தனர்.-News & image Credit: dinamalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!