நடுக்கடலில் குளித்த கல்லூரி மாணவருக்கு நேர்ந்த சோகம்!

நண்பர்களுடன் கடலுக்குள் சென்று நடுக்கடலில் குளித்த கல்லூரி மாணவர் கடலுக்குள் மூழ்கினார். கல்லூரி மாணவர் புதுச்சேரி மடுவுபேட் பகுதியை சேர்ந்தவர் விக்கி என்கிற விக்னேஷ் (வயது 19).

புதுச்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர் சோலைநகர் பகுதியை சேர்ந்த மாதேஷ். இவர்கள், தங்கள் நண்பர்கள் 12 பேருடன் இன்று மாலை கடலுக்குள் சென்று குளிக்க ஆசைப்பட்டனர். இதற்காக மாதேசின் தந்தைக்கு சொந்தமான பைபர் படகை அவருக்கு தெரியாமல் எடுத்துக்கொண்டு தேங்காய்திட்டு துறைமுகத்தில் இருந்து புறப்பட்டு கடலுக்குள் சென்றனர்.

போதை விருந்து

சிறிது தூரம் சென்ற பின்னர் அவர்கள் கடலுக்குள் படகை நிறுத்தி விட்டு மது குடித்தனர். பின்னர் அவர்களில் சிலர் கடலில் குதித்து குளித்தனர். அப்போது விக்கி உள்பட 3 பேர் கடலில் தத்தளித்துள்ளனர். அவர்களை சக நண்பர்கள் காப்பாற்ற முயன்றனர்.

அவர்களின் கூச்சல் சத்தம் கேட்டு, அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்த மீனவர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்க முயற்சி செய்தனர். இதில் 2 பேரை பத்திரமாக மீட்டனர். ஆனால் விக்கி கடலுக்குள் மூழ்கி மாயமானார். அவரை நீண்ட நேரம் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மற்றவர்கள், தாங்கள் சென்ற படகில் கரைக்கு திரும்பினர்.

விசாரணை

இது குறித்து ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விக்கியின் நிலை என்ன என்று தெரியாமல் அவரது பெற்றோர் கவலையில் உள்ளனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!