பதவி விலகாமல் தப்பிச் சென்ற அதிபர் – நீடிக்கும் போராட்டம்…. இலங்கையில் அவசர நிலை பிரகடனம்!

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே அரசுக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்திய அவர்கள், கடந்த 3 நாட்களுக்கு முன் இலங்கை அதிபர் மாளிகைக்குள் நுழைந்து அதை ஆக்ரமித்தனர்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி விலகல் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளார் என்றும், இன்று அது முறைப்படி அறிவிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் தனது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் கோத்தபய ராஜபக்சே இலங்கை விமானப்படை விமானத்தில் மாலைதீவு தலைநகர் மாலே நகருக்கு புறப்பட்டுச் சென்றதாக இலங்கை குடியுரிமை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இன்று அதிகாலையில் அவர் மாலே நகரை அடைந்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கோத்தபயவுடன் 13 பேர் ஏஎன்32 விமானத்தில் மாலத்தீவு சென்றதாக தொலைக்காட்சி செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.

இலங்கையில் போராட்டம் தொடரும் நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே அவசர நிலையை பிரகடனம் செய்தார். மேலும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனே பதவி விலகக்கோரி போராட்டம் தொடர்வதால் அவசர நிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலகாமல் மாலத்தீவுக்கு தப்பிச் சென்ற நிலையில் போராட்டம் தொடர்கிறது. இலங்கை பிரதமர் அலுவலகத்தை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்ட நிலையில் கண்ணீர் புகைக்குண்டு வீசப்பட்டுள்ளன. இதனால் இலங்கையில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!