நடிகை மீனாவின் கணவர் மரணத்திற்கு இதுதான் காரணமா..?

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் மரணத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.

பிரபல நடிகையான மீனாவின் கணவர் வித்யாசாகர். மென்பொறியாளரான இவர் நேற்று உடல்நலக்குறைவால் காலமானார். நடிகை மீனாவுக்கும் வித்யாசாகருக்கும் கடந்த 2009ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உள்ளார்.

கொரோனா பாதிப்பு

இவர்கள் கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் உள்ள வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தனர். இந்நிலையில் நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர், கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மட்டுமின்றி, இவரது தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகா ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது.

நுரையீரல் தொற்று

அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்னதாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மருத்துவமனையில் நுரையீரல் தொற்றுக்காக சிகிச்சை பெற்று வந்தார்.

வித்யாசாகர் மரணம்

இந்நிலையில் வித்யாசாகரின் நிலைமை மோசமடைந்ததால் உயர் சிகிச்சைகாக அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9 மணியளவில் உயிரிழந்தார். 48 வயதான வித்யாசாகரின் மறைவு தமிழ் சினிமா பிரபலங்களையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புறாக்களின் எச்சம்

இதனிடையே வித்யாசாகருக்கு ஏற்கனவே நுரையீரல் பாதிப்பு இருந்ததாகவும் அவருக்கு புறாக்களின் எச்சம் பட்ட காற்றை சுவாசிப்பதால் நுரையீரலில் அலர்ஜி ஏற்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூருவில் வித்யாசாகர் வீட்டின் அருகே அதிகளவு புறாக்கள் வளர்க்கப்பட்டிருந்ததாகவும் அப்போதிலிருந்தே அவருக்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டு, இரண்டு நுரையீரல்களையும் மாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

நிலைமை மோசமானது

இந்த நேரத்தில்தான் கொரோனாவும் சேர்ந்து அவரது நிலைமை மிகவும் மோசமாக்கியதாகவும், நுரையீரல் தானம் கிடைப்பதற்குள் அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்த மருத்துவர்கள் முயற்சித்த நிலையில்தான் சிகிச்சை பலனின்றி வித்யாசாகர் மரணமடைந்ததாக கூறப்படுகிறது. வித்யாசாகரின் இறுதிச்சடங்கு கோட்டூர்புரத்தில் உள்ள அவரது வீட்டில் இன்று நடைபெறும் என தெரிகிறது.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!