மின்னல் வேகத்தில் சொகுசு காரில் வந்து ஆடு திருடும் கும்பல்!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் லோடு வேன் மற்றும் சொகுசு கார்களில் வந்து ஆடுகளை மர்ம நபர்கள் திருடி செல்லும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி இரவு திருச்செந்தூர் அருகே உள்ள ஆலந்தலையில் உள்ள ஒரு தெருவில் சாலை ஓரத்தில் 10-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுத்து கிடந்தது.

அந்த நேரத்தில் அங்கு ஒரு சொகுசு கார் வந்தது. அந்த காரில் இருந்து முன்பக்க கதவை திறந்து சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவர் வேகமாக கீழே இறங்கினார். அவர் படுத்து கிடந்த ஆடுகளில் ஒன்றை பிடித்து காரில் ஏற்றிக்கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் புறப்பட்டு சென்றனர்.

காரில் ஆட்டை திருடி செல்வதை பார்த்த அப்பகுதி மக்கள் காரை விரட்டி சென்றனர். ஆனால் கார் மின்னல் வேகத்தில் சென்றுவிட்டது. இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் உள்ள வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருந்தது. தற்போது இந்த காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதில் காரின் பதிவெண் சென்னையை சேர்ந்ததாக இருந்தது.

அதனை வைத்து தற்போது போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். திருச்செந்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு சில மாதத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே போலீசார் இரவு நேர ரோந்து பணியை துரிதப்படுத்தி இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபடும் மர்ம கும்பலை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!