உருட்டுகட்டையால் அடித்து டிரைவருக்கு நடந்த கொடூரம்!

தேனி மாவட்டம் கம்பம் அருகில் உள்ள காமையகவுண்டன்பட்டி பெரியகருப்புசாமி கோவில் தெருவை சேர்ந்தவர் அழகுபகவதி(42). டீக்கடை வைத்து நடத்தி வந்தார். மேலும் ஆக்டிங் டிரைவராகவும் வேலை பார்த்து வந்தார்.

இவருக்கு திருமணமாகி செல்வி என்ற மனைவியும், 15 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இன்று காலை பகவதிஅம்மன் கோவிலில் இருந்து தோட்டத்திற்கு செல்லும் வழியில் அவர் மயங்கி கிடந்தார். அவ்வழியாக சென்றவர்கள் குடிபோதையில் கிடக்கலாம் என்று சென்றுவிட்டனர்.

நீண்டநேரமாக அதேஇடத்தில் கிடந்ததாலும், அவரது மோட்டார் சைக்கிள் அங்கேயே நிறுத்தப்பட்டிருந்ததாலும் சந்தேகமடைந்து அருகில் சென்று பார்த்தபோது மண்வெட்டியின் கைப்பிடியான கட்டையால் தாக்கப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

இதைபார்த்ததும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ராயப்பன்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு ஏ.எஸ்.பி ஸ்ரேயாகுப்தா தலைமையிலான போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

மோப்பநாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது. கொலை செய்யப்பட்டவரின் உடல் தேனி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இவர் எதற்காக கொலைசெய்யப்பட்டார்? பெண் பிரச்சினையால் கொலை நடந்ததா? முன்விரோதத்தில் நடந்ததா என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!