‘குழந்தை இல்லாத ஆத்திரத்தில் அடித்துக்கொன்றேன்’-கைதான கணவர் பரபர வாக்குமூலம்!

சேலத்தில் பெண் என்ஜினீயர் கொலை வழக்கில் கைதான கணவர், குழந்தை இல்லாத ஆத்திரத்தில் அடித்துக்கொன்றதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

பெண் என்ஜினீயர்

சேலம் சூரமங்கலம் முல்லை நகரை சேர்ந்தவர் தியாகலிங்கம். இவருடைய மனைவி ராஜலட்சுமி. இவர்களது மகள் தனுஸ்ரீ (வயது 26). என்ஜினீயரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த கீர்த்திராஜ் (31) என்பவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கணவன், மனைவி இருவரும் சேலம் ரெட்டிப்பட்டியில் தனியாக வசித்து வந்தனர்.

இந்த நிலையில் இருவருக்கும் அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த 11-ந் தேதி இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கீர்த்திராஜ், மனைவியை கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்தார். இதையடுத்து சூரமங்கலம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து கீர்த்திராஜை கைது செய்தனர்.

வாக்குமூலம்

மனைவியை கொலை செய்தது ஏன்? என்று கீர்த்திராஜ் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்து உள்ளார். இது குறித்து போலீசார் கூறியதாவது:-

திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் கீர்த்திராஜ், தனுஸ்ரீ தம்பதிக்கு குழந்தை இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு உள்ளது. மேலும் உறவினர்கள் திருமணம் ஆகி 3 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையா? என்று கீர்த்திராஜிடம் அடிக்கடி கேட்டு வந்துள்ளனர். இது கீர்த்திராஜிக்கு மனைவி மீது வெறுப்பை ஏற்படுத்தி உள்ளது. இதன் காரணமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. சம்பவத்தன்று தகராறு ஏற்படவே குழந்தை இல்லாத ஆத்திரத்தில், கீர்த்திராஜ் வீட்டில் இருந்த கிரிக்கெட் மட்டையால் தனுஸ்ரீயின் தலையில் அடித்து உள்ளார். இதில் மண்டை உடைந்து அவருக்கு ரத்தம் பீறிட்டு வெளியேறியது. அப்போது கீர்த்திராஜிடம் காப்பாற்றும் படி கேட்டு கதறி அழுது உள்ளார்.

கொலை

மனைவியை அடித்துவிட்டோமே என்று சிறிதும் நினைக்காமல், ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய தனுஸ்ரீயை அவரது துப்பட்டாவால் கழுத்தை இறுக்கி உள்ளார். இதில் அவர் துடித்துடித்து உயிரிழந்தார். பின்னர் கொலையை மறைக்க தனுஸ்ரீ தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடி உள்ளார். தனுஸ்ரீயின் பிரேத பரிசோதனையில் அவர் கொலை செய்யப்பட்டது உறுதியானது. இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!