தலையிலுள்ள பொடுகு பிரச்சினையை தீர்க்கும் ஹேர் மாஸ்க்!

பொடுகு பிரச்சினையை தீர்க்கவும், கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கவும் ‘ஹேர் மாஸ்க்’ பயன்படுகிறது. ஒரு சில எளிய ஹேர் மாஸ்க்குகளின் செய்முறை இதோ…


தலையில் உருவாகும் பூஞ்சைத் தொற்று மற்றும் வறட்சி காரணமாக பொடுகு ஏற்படுகிறது. இது தலையில் அரிப்பு, முகத்தில் பருக்கள் ஏற்பட காரணமாக அமைகிறது. எண்ணெய் வடியும் சருமம், வறண்ட சருமம், சுத்தமில்லாத தலைமுடி, தலைக்கு பயன்படுத்தும் தரம் குறைந்த பராமரிப்புப் பொருட்கள், மன இறுக்கம், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு போன்ற பல காரணங்களால் பொடுகு ஏற்படும். இந்தப் பிரச்சினையை தீர்க்கவும், கூந்தலுக்கு ஊட்டம் கொடுக்கவும் ‘ஹேர் மாஸ்க்’ பயன்படுகிறது. ஒரு சில எளிய ஹேர் மாஸ்க்குகளின் செய்முறை இதோ…

செம்பருத்தி ஹேர் மாஸ்க்

செம்பருத்தி இலை அல்லது பூ – 4
தேங்காய் எண்ணெய் – 2 தேக்கரண்டி
தண்ணீர் சேர்த்து செம்பருத்தி இலை அல்லது பூக்களை நன்றாக அரைக்கவும். அதனுடன் தேங்காய் எண்ணெய் கலந்து தலைக்கு மசாஜ் செய்யவும். 2 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கவும்.

வெந்தயம் மாஸ்க்

வெந்தயம் – ¼ தேக்கரண்டி
தயிர் – 1 தேக்கரண்டி
நெல்லிக்காய் – 1
கறிவேப்பிலை – 1 கைப்பிடி அளவு
வெந்தயம், தயிர், நெல்லிக்காய், கறிவேப்பிலை அனைத்தையும் தண்ணீர் சேர்த்து அரைத்து இரவு முழுவதும் ஊறவைக்கவும். காலையில் தலையில் தடவி, 1 மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரில் தலைக்கு குளிக்கவும்.

எலுமிச்சை மாஸ்க்

தேங்காய் எண்ணெய் – ½ கப்
எலுமிச்சம் பழச்சாறு – 1 தேக்கரண்டி
வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாறு கலந்து, தலையில் தடவ வேண்டும். 10 முதல் 15 நிமிடங்கள் மசாஜ் செய்து, 30 நிமிடம் ஊற வைத்து, பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைக்கு குளிக்கவும்.

கொத்தமல்லி மாஸ்க்

கொத்தமல்லி இலை – 1 கப்
விளக்கெண்ணெய் – 3 மேசைக்கரண்டி
கொத்தமல்லியை அரைத்து, அதில் விளக்கெண்ணெய் ஊற்றி கலக்க வேண்டும். அதைத் தலையில் தடவி 15 நிமிடம் ஊற வைத்துக் குளித்தால் நல்ல பலன் கிடைக்கும்.

தயிர் மாஸ்க்

தயிர் – 1 கப்
எலுமிச்சம் பழச்சாறு – 1 மேசைக்கரண்டி
தயிரில் எலுமிச்சம் பழச்சாறு கலந்து, தலையில் தடவி 45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்பு குளிர்ந்த நீரில் தலைக்கு குளிக்கவும்.

வேப்பிலை மாஸ்க்

வேப்பிலை – 1 கைப்பிடி
மிளகுத் தூள் – 1 சிட்டிகை
வெந்தயப் பொடி – ¼ தேக்கரண்டி
கற்பூரம் – ¼ தேக்கரண்டி
எலுமிச்சம் பழச்சாறு – ¼ தேக்கரண்டி

வேப்பிலையை அரைத்து அதில் மிளகுத்தூள், வெந்தயப் பொடி, கற்பூரம், எலுமிச்சம் பழச்சாறு சேர்த்துக் கலக்க வேண்டும். இந்தக் கலவையைத் தலையில் தடவி, 30 நிமிடம் ஊற வைத்து, குளிர்ச்சியான நீரில் குளிக்க வேண்டும்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!