ஆற்றில் விழுந்த கார்… விபத்தில் சிக்கிய சமந்தா – விஜய் தேவரகொண்டா!

குஷி படத்தின் படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் விஜய் தேவரகொண்டாவும், சமந்தாவும் காயம் அடைந்தனர்.

தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் சமந்தா கணவரை விவாகரத்து செய்த பிறகு மேலும் படங்களில் தீவிரமாக நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த காத்துவாக்குல ரெண்டு காதல் திரைக்கு வந்தது. அடுத்து தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ள யசோதா, சாகுந்தலம் படங்கள் ரிலீசுக்கு தயாராக உள்ளன. தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் குஷி என்ற தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.

நடிகையர் திலகம் படத்தை அடுத்து சமந்தா, விஜய் தேவரகொண்டா மீண்டும் சேர்ந்து நடிக்கும் படம் குஷி. இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடந்தபோது சண்டை காட்சி ஒன்றை படமாக்கி இருக்கிறார்கள். அப்பொழுது விஜய் தேவரகொண்டா, சமந்தா சென்ற கார் ஆற்றில் விழுந்துவிட்டது. இதில் சமந்தா, விஜய் தேவரகொண்டா காயம் அடைந்தார்கள்.

இது குறித்து படக்குழுவை சேர்ந்த ஒருவர் கூறியதாவது, காயம் அடைந்ததும் இருவருக்கும் முதலுதவி கொடுக்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை படப்பிடிப்பின்போது இருவருமே முதுகு பகுதி வலிப்பதாக தெரிவித்தனர். உடனே அருகில் உள்ள ஹோட்டலில் அவர்களை தங்க வைத்து பிசியோதெரபிஸ்ட்டை வரவழைத்தோம்.

இருவருக்கும் பிசியோதெரபி போய்க் கொண்டிருக்கிறது. அவர்கள் இருவருக்கும் அருகில் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை என்றார். காஷ்மீரில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு திங்கட்கிழமை மதியம் படக்குழு ஹைதராபாத் கிளம்பி வந்தது. குஷி படம் வரும் டிசம்பர் மாதம் தியேட்டர்களில் வெளியாக உள்ளது. இப்படம் தெலுங்கு, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!