காதல் கணவரை கத்தியால் குத்திக்கொன்ற மனைவி கைது!

திருச்சியில் குடும்பத்தகராறில் காதல் கணவரை மனைவியே கத்தியால் குத்திக்கொலை செய்தார். அவரை போலீசார் கைது செய்தனர்.

திருச்சி சுப்பிரமணியபுரம் பன்னீர்செல்வம் தெருவை சேர்ந்தவர் மீனாட்சிசுந்தரம். இவருடைய மகன் தினேஷ்ராஜசேகரன்(வயது 28). இவர் தென்னூர் பட்டாபிராமன் சாலையில் இருசக்கர வாகன ஷோரூமில் கலெக்‌ஷன் முகவராக வேலை செய்து வந்தார்.

இவருடைய மனைவி லாவண்யா(26). இவர்கள் இருவரும் கல்லூரியில் படிக்கும்போதே காதலித்து வந்தனர். இதைத்தொடர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு 2 வயதில் ஒரு ஆண் குழந்தை உள்ளது.

தற்கொலை மிரட்டல்

இந்நிலையில் கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, திேனஷ்ராஜசேகரன் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறி மனைவியை அடிக்கடி மிரட்டி வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு தனது குழந்தைக்கு வாழைப்பழம் வாங்கி வரும்படி தினேஷ்ராஜசேகரனிடம், லாவண்யா கூறியுள்ளார். ஆனால் தினேஷ்ராஜசேகரன் வாழைப்பழம் வாங்காமல் மது அருந்திவிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கணவன்-மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் விரக்தி அடைந்த தினேஷ்ராஜசேகரன் சமையல் அறைக்குள் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தற்கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

கத்திக்குத்து

இதையடுத்து தனது கணவரிடம் இருந்து லாவண்யா கத்தியை பறிக்க முயன்றுள்ளார். ஆனால் அவர் கத்தியை கொடுக்க மறுத்துள்ளார். இதனால் இருவரும் கத்தியை பிடித்துக்கொண்டு மல்லுகட்டியுள்ளனர். அப்போது, லாவண்யா கத்தியை பறித்த வேகத்தில், தனது கணவரின் நெஞ்சில் வேகமாக குத்தியதாக கூறப்படுகிறது. இதில் ரத்தவெள்ளத்தில் தினேஷ்ராஜசேகரன் மயங்கி சரிந்தார். உடனே, அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

கொலை வழக்கு

இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர், தினேஷ்ராஜசேகரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கணவரை கத்தியால் குத்திய லாவண்யா மீது இந்திய தண்டனை சட்டம் 302 பிரிவின் (கொலை) கீழ் வழக்குப்பதிவு செய்து, லாவண்யாவை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!