அக்கா குருவி திரைவிமர்சனம்!

நடிகர் நடிகர் இல்லை
நடிகை நாயகி இல்லை
இயக்குனர் சாமி
இசை இளையராஜா
ஓளிப்பதிவு உத்பல் வி.நாயனார்


சிறுவன்-சிறுமியாக இருக்கும் அண்ணன்-தங்கை. அவர்களின் ஏழை தந்தை, நோயாளி தாய், ஒரு இளம் காதல் ஜோடி… இவர்கள்தான் படத்தின் கதாபாத்திரங்கள். இந்த ஆறு பேர்களை வைத்துக்கொண்டு உணர்வுப்பூர்வமாக கதை சொல்லியிருக்கிறார், இயக்குனர் சாமி.

ஒரு ‘ஷூ’வில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. சிறுமி சாராவின் ‘ஷூ’ திடீரென்று காணாமல் போகிறது. அது, கான்வென்ட் என்பதால் ‘ஷூ’ இல்லாமல் பள்ளிக்குள் அனுமதிக்கமாட்டார்கள். சாராவின் பள்ளி நேரம் முடிந்ததும் தேவா ஓடிப்போய் தங்கையிடம் இருந்து ‘ஷூ’வை வாங்கி அணிந்து கொண்டு தனது பள்ளிக்கு ஓடுகிறான். இப்படி அண்ணனும், தங்கையும் ஒரே ‘ஷூ’வை மாற்றி மாற்றி அணிந்துகொண்டு சமாளிக்கிறார்கள்.

சைக்கிள் வாங்குவதற்காக உண்டியலில் காசு சேர்த்து வரும் தேவா, தங்கைக்கு ‘ஷூ’ வாங்கி கொடுப்பதற்காக அந்த உண்டியலை உடைக்கிறான். அவன் தங்கைக்கு புது ‘ஷூ’ வாங்கிக் கொடுத்தானா?, இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

தேவாவாக மாஸ்டர் மஹீன், தங்கையாக பேபி திவ்யா நடித்து இருக்கிறார்கள் என்று சொல்வதைவிட, பாசமுள்ள அண்ணன்-தங்கையாகவே கவனம் ஈர்க்கிறார்கள் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். இருவரும் நடித்தது போல் தெரியவில்லை. இவர்களின் தந்தையாக வி.எஸ்.குமாருக்கு இது முதல் படம் என்பது திரையில் தெரிகிறது.

இந்த மூன்று பேர்களின் கதையை மட்டும் சொன்னால், ‘ஒரு அப்பாவும், இரண்டு குழந்தைகளும்’ என்று படம் ஒரு குறுகிய வட்டத்துக்குள் முடங்கிப்போயிருக்கும்.

மஜித் மஜிதி இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ஈரானியப் படமான சில்ட்ரன் ஆஃப் ஹெவன் படத்தின் மறு ஆக்கமாக இயக்குனர் சாமி இப்படத்தை இயக்கியுள்ளார். ‘உயிர்’, ‘மிருகம்’, ‘சிந்து சமவெளி’ ஆகிய படங்களை இயக்கிய டைரக்டர் சாமியிடம் இருந்து இப்படி ஒரு படமா என்று ஆச்சரியப்பட வைக்கிறார். தேவாவும், அவனுடைய தந்தையும் நகரத்துக்கு வந்து தோட்ட வேலை தேடுவது, தேவையில்லாத காட்சி.

பின்னணி இசை மூலம் பார்வையாளர்களை படத்துடன் ஒன்ற வைத்து விடுகிறார், இசையமைப்பாளர் இளையராஜா. கொடைக்கானல் அழகை மாறாமல் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் உத்பல் வி.நாயனார்.

மொத்தத்தில் ‘அக்கா குருவி’ கோடை கால விருந்து.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!