கடனை அடைக்க கொள்ளையராக மாறிய காதல் ஜோடி!

கோவை தொண்டாமுத்தூரில் மூதாட்டியில் நகை கொள்ளையில் ஈடுபட்ட காதல் ஜோடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை தொண்டாமுத்தூர் கிழக்கு வீதியைச் சேர்ந்தவர் காளியம்மாள் (வயது 76). இவர் ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகிறார்.

கடந்த 28-ந்தேதி இவர் அந்த பகுதியில் உள்ள மயானம் அருகே ஆடு மேய்த்துக் கொண்டு இருந்தார். அப்போது மோட்டார்சைக்கிளில் ஒரு இளம்பெண்ணும், வாலிபரும் வந்தனர்.

அவர்கள் காளியம்மாளிடம் முகவரி கேட்பது போல் நடித்து அவர் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

இதுபற்றி காளியம்மாள் தொண்டாமுத்தூர் போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஆனந்தகுமார், சப்-இன்ஸ்பெக்டர் அருள்பிரகாஷ் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

போலீசார் நகை கொள்ளை நடந்த பகுதியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். மோட்டார்சைக்கிளில் இளம்பெண்ணும், வாலிபரும் தப்பிச் செல்லும் காட்சிகள் கேமிராவில் பதிவாகி இருந்தன.

அந்த காட்சிகளை கொண்டு போலீசார் விசாரித்தபோது அவர்கள் சோமையம்பாளையத்தைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 20) என்பதும், அவருடன் வந்த பெண் சுங்கம் பைபாஸ் பகுதியைச் சேர்ந்த தேஜஸ்வினி (20) என்பதும் தெரியவந்தது.

இவர்கள் 2 பேரும் தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் 3ம் ஆண்டு படித்து வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக இவர்கள் காதலித்து வந்தனர்.

பிரசாந்த் ஆன்லைன் டிரேடிங்கில் பணம் செலுத்தி நஷ்டம் அடைந்துள்ளார். இதனால் பல இடங்களிலும் கடன் பெற்றுள்ளார். அந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் சிரமப்பட்டார். கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி கொடுக்கவே பணத்துக்கு வழி தெரியாமல் கொள்ளையடிக்க திட்டமிட்டு உள்ளார்.

இதற்கு அவரது காதலியான தேஜஸ்வினியும் உடந்தையாக இருந்துள்ளார். சம்பவத்தன்று பிரசாந்தும், தேஜஸ்வினியும் ஜாலியாக ஊர் சுற்றி விட்டு மோட்டார்சைக்கிளில் வந்தனர். அப்போது தான் ரோட்டோரம் காளியம்மாள் நிற்பதையும், அவர் கழுத்தில் தங்க நகை அணிந்திருப்பதையும் கண்டனர். உடனே தங்கள் திட்டத்தை அரங்கேற்ற முடிவு செய்து காளியம்மாளிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகையை கொள்ளையடித்து தப்பிச் சென்றுள்ளனர்.

கொள்ளை நகையை அப்படியே விற்றால் சிக்கிக் கொள்வோம் என நினைத்த அவர்கள் அதனை தங்க கட்டியாக உருக்கி இருக்கிறார்கள். அந்த தங்க கட்டியை விற்க எடுத்துச் செல்லும் போது போலீசில் சிக்கிக் கொண்டனர்.

பிரசாந்த்தையும், தேஜஸ்வினியையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!