ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தூக்கில் தொங்கிய பரிதாபம்..!

ராணிப்பேட்டையில், குடும்ப பிரச்சினை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை,மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது,

குடும்ப பிரச்சனை

ராணிப்பேட்டையில் உள்ள காரை புதுதெரு பகுதியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (65). இவர் அப்பகுதியில் சைக்கிள் ரிப்பேர் கடை வைத்துள்ளார். இவரது மனைவி குணசுந்தரி (55). இவர் மாவு அரைக்கும் இயந்திரம் வைத்து மாவு அரைத்து தரும் தொழில் செய்து வருகிறார். இவர்களுக்கு விக்னேஷ், ரமேஷ் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

இதில் விக்னேஷ் சுமார் 4 வருடங்களுக்கு முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. மேலும் ரமேஷிற்கு கொளத்தூரை சேர்ந்த காயத்ரி என்பவருடன் திருமணம் ஆகி லோகிதா (3) என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கணவன்-மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 6 மாதங்களாக பிரிந்து வாழ்கின்றனர் என்று கூறப்படுகிறது.

ரமேஷிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்துள்ளது. இதனால், இப்பழக்கத்தில் இருந்து விடுபட, மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சற்று மனநலமும் பாதிக்கப்பட்டிருந்தார் என்று கூறப்படுகிறது.

மகன் தூக்கிட்ட கயிற்றில் தாயும் தூக்கு போட்டு இறந்த பரிதாபம்

இந்நிலையில் குடும்ப பிரச்சினை காரணமாக மன வருத்தத்தில் இருந்த ரமேஷ் நேற்று இரவு மது அருந்திவிட்டு, வீட்டில் தகராறு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் வீட்டில் உள்ள முன்பக்க அறையில் இன்று அதிகாலை மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மகன் தூக்குப் போட்டுக் கொண்டதை பார்த்த அவரது தந்தை பன்னீர்செல்வம், தாய் குணசுந்தரி ஆகியோர் அதிர்ச்சியில் கதறி அழுதுள்ளனர்.பிறகு தாங்களும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்துள்ளனர்.

இதனையடுத்து மகனின் பிணத்தை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கிவிட்டு, அதே கயிற்றில் அடுத்துள்ள சிமெண்ட் ஷீட் போட்ட அறையில் தாய் குணசுந்தரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தந்தை பன்னீர்செல்வம் புடவையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

போலீஸ் விசாரணை

இதனையடுத்து இது குறித்து தகவல் ராணிப்பேட்டை போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்க்கு வந்த போலீசார் துக்கிட்டு இறந்த மூன்று பேரின் உடலையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், தந்தை, மகன், தூக்குப்போட்டு இறந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மந்திரி ஆறுதல்

இச்சோக சம்பவம் குறித்து தகவல் அறிந்த கைத்தறி மற்றும் துணிநூல் துறை மந்திரி காந்தி, சம்பவ இடத்திற்கு சென்று, இறந்த மூன்று பேரும் உடலுக்கும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அங்கிருந்த அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்தார்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!