காணாமல் போன கணவர்… ஊர் ஊராக தேடி அலையும் பாசக்கார மனைவி!

காணாமல் போன கணவரை கண்டுபிடிக்க, ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும், பழனியம்மாள் தேடி வருகிறார்.

வாழப்பாடி அடுத்த முத்தம்பட்டி கேட் பகுதியைச்சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் சிவராமன் (வயது 45). இவர் வாழப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுத்து வந்தார். இதில் குறைந்த வருவாயே கிடைத்து வந்த நிலையிலும் மனைவி மற்றும் குழந்தைகளுடன் மிகுந்த பாசத்தோடு இருந்து வந்தார். இதற்கிடையே இவருக்கு சிறிது உடல்நிலை பாதிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 7-ந் தேதி காலை முத்தம்பட்டியிலுள்ள தனது வீட்டிலிருந்து வாழப்பாடிக்கு சென்ற இவர் வீடு திரும்பவில்லை. தனது கணவர் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த இவரது மனைவி பழனியம்மாள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியுள்ளனர். ஆனால் கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து வாழப்பாடி போலீஸ் நிலையத்தில் பழனியம்மாள் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால், சிவராமன் குறித்து இதுவரை எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

எனவே, காணாமல் போன தனது கணவரை கண்டுபிடிக்க, ஆட்டோவில் ஒலிபெருக்கி வைத்து ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தும், துண்டு பிரசுரங்களை வினியோகித்தும், பழனியம்மாள் தேடி வருகிறார்.

பழனியம்மாள், தனியொரு பெண்ணாக ஊர் ஊராக ஆட்டோவில் சென்று, தனது கணவரின் புகைப்படத்தை கையில் வைத்துக்கொண்டு, ஒரு வாரத்திற்கு மேலாக சரியாக உணவு கூட உண்ணாமல், கண்ணீர் மல்க பொதுமக்களிடம் காண்பித்து தேடி வருவது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உங்களது கணவர் பத்திரமாக வீடு திரும்பிட பிரார்த்தனை செய்வதாகவும், ஏதேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக தெரியப்படுத்துவதாகவும், பொதுமக்கள் பலர் அந்த பெண்ணிற்கு நம்பிக்கையும் ஆறுதலும் தெரிவித்து வருகின்றனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!