சவக்குழியில் காதல் மனைவியை உயிரோடு புதைத்தேன்… கைதான வாலிபர் பகீர்..!

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் அவரது கணவரை போலீசார் கைது செய்தனர்.

வேலூர் மாவட்டம் கே.வி. குப்பம் அடுத்த வடுகன்தாங்கல் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கணேசன் என்கிற விநாயகம் (வயது 24). கூலித்தொழிலாளி.

குடியாத்தம் தரணம்பேட்டை பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவரது மகள் சுப்ரஜா (24). இவர்கள் இருவரும் வேலூரில் உள்ள தனியார் ஐடிஐயில் படிக்கும்போது காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களது பெற்றோர்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து பெற்றோரின் எதிர்ப்பை மீறி கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். முடினாம் பகுதியில் தனியாக வசித்து வந்தனர். அவர்களுக்கு 2 வயதில் ஆண் குழந்தை உள்ளது.

காதல் திருமணம் செய்து கொண்டதால் சுப்ரஜாவை அவரது வீட்டில் சேர்க்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சுப்ரஜா மாயமாகி விட்டதாக விநாயகம் தெரிவித்தார்.

சுப்ரஜாவின் உறவினர் ஒருவர் சந்தேகமடைந்து இதுகுறித்து கே.வி.குப்பம் போலீசில் புகார் அளித்தார்.

போலீசார் இது தொடர்பாக விநாயகத்திடம் விசாரணை நடத்தினர். அப்போது விநாயகம் அவரது தம்பி விஜய், உறவினர் 17 வயது சிறுவன் ஆகியோர் சேர்ந்து சுப்ரஜாவை தாக்கி உயிருடன் புதைத்து கொன்றது தெரியவந்தது.

சர்க்கார் தோப்பு வனப்பகுதியில் சுப்ரஜாவை புதைத்திருப்பதாக தெரிவித்தனர். நேற்று சர்க்கார் தோப்பில் சுப்ரஜாவின் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்தனர்.

மேலும் விநாயகம் அவரது தம்பி விஜய் ஆகியோரை கைது செய்து வேலூர் ஜெயிலில் அடைத்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்த 17 வயது சிறுவன் சென்னை சீர்திருத்த பள்ளியில் அடைக்கப்பட்டார்.

இந்த கொலை சம்பவம் குறித்து விநாயகம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

நான் சுப்ரஜாவை காதலித்து திருமணம் செய்து கொண்டேன். 2 வயதில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வேலூரைச் சேர்ந்த திருமணமான பெண் ஒருவருடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது கள்ளக்காதலாக மாறியது. இதையறிந்த சுப்ரஜா கள்ளக்காதலியுடன் உள்ள தொடர்பை கைவிடுமாறு கண்டித்தார்.

இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நான் சுப்ரஜாவை சில முறை அடிக்கவும் செய்தேன்.

இந்நிலையில் அவரின் உடல் நிலை பாதிக்கப்பட்டது. அவர் கள்ளக்காதலை கைவிட கூறி என்னிடம் தொடர்ந்து தகராறு செய்தார்.

கள்ளக்காதலியுடன் சேர்ந்து வாழ முடிவு செய்தேன். இதற்கு இடையூறாக உள்ள சுப்ரஜாவை தீர்த்துக் கட்டினால் கள்ளக்காதலியுடன் சந்தோ‌ஷமாக வாழலாம் என நினைத்தேன்.

கடந்த 2 மாதங்களுக்கு முன்பு எனது தம்பி விஜய் மற்றும் உறவினர் 17 வயது சிறுவன் ஆகியோருடன் சேர்ந்து சர்க்கார் தோப்பு வனப்பகுதியில் சவக்குழி தோண்டினோம்.

அதற்கு மறுநாள் எனக்கும் சுப்ரஜாவுக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது கைகளால் தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வதாக கூறினேன். அதை நம்பி அவரும் என்னுடன் வந்தார்.

அவரை சர்க்கார் தோப்பு வனப்பகுதிக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஏற்கனவே திட்டமிட்டபடி விஜய் மற்றும் 17 வயது சிறுவன் இருவரும் தயாராக இருந்தனர். 3 பேரும் சேர்ந்து சுப்ரஜாவை தாக்கினோம் அவர் மயங்கி விழுந்தார்.

ஏற்கனவே தோண்டி வைத்திருந்த குழியில் அவரை உயிருடன் புதைத்துக் கொன்றோம். பின்னர் எதுவும் நடக்காததுபோல் அங்கிருந்து புறப்பட்டு வந்து விட்டோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!