சர்வதேச விளையாட்டில் சர்ச்சையில் சிக்கிய 28 ரஷிய வீரர்களின் தடை ரத்து…!


ஊக்க மருந்து சர்ச்சையில் சிக்கிய 28 ரஷிய வீரர்களின் ஆயுட்கால தடையை ரத்து செய்து சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

ரஷியாவின் சூரிச் நகரில் கடந்த 2014-ம் ஆண்டில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற ரஷிய வீரர்-வீராங்கனைகள் அரசின் உதவியுடன் ஊக்க மருந்து பயன்படுத்தி போட்டியில் பதக்கம் வென்றதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது குறித்து விசாரணை நடத்திய சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் ரஷியாவை சேர்ந்த 43 வீரர்-வீராங்கனைகள் போட்டிகளில் பங்கேற்க ஆயுட்கால தடை விதித்தது.

இதில் ஒருவர் தவிர 42 பேரும் சுவிட்சர்லாந்தில் உள்ள சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயத்தில் தங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து அப்பீல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சர்வதேச விளையாட்டு தீர்ப்பாயம் ரஷிய வீரர்-வீராங்கனைகளில் 28 பேர் மீதான ஊக்க மருந்து குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லாததால் அவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த ஆயுட்கால தடையை ரத்து செய்து நேற்று அதிரடியாக உத்தரவிட்டது.

தென்கொரியாவில் வருகிற 9-ந் தேதி குளிர்கால ஒலிம்பிக் போட்டி தொடங்க இருக்கும் நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அத்துடன் மீதமுள்ள 11 பேருக்கு விதிக்கப்பட்ட ஆயுட்கால தடையை தீர்ப்பாயம் குறைத்துள்ளது.

அவர்கள் மீதான குற்றச்சாட்டில் உண்மை இருப்பினும் அதற்கு ஆயுட்கால தடை என்பது சரியாகாது. அவர்களுக்கு 2018-ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக் போட்டி வரை தடை நீடிக்கும் என்று தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

எஞ்சிய 3 பேர் மீதான வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. விளையாட்டு தீர்ப்பாயத்தின் தீர்ப்பை ரஷிய விளையாட்டு அமைப்புகள் வரவேற்று இருக்கின்றன.

அதேநேரத்தில் சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் இந்த தீர்ப்பு குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளது. இதனை எதிர்த்து அப்பீல் செய்ய ஆலோசனை நடத்தி வருகிறது. – Source: maalaimalar.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!