இனி உயிர் வாழ வழியில்லை… குழந்தைகளுடன் தமிழகத்துக்கு வரும் இலங்கை மக்கள்!

உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு பலர் குழந்தைகளுடன் வருகிறார்கள்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துள்ளது. உணவுப்பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் இலங்கை தலைமன்னார் பகுதியில் இருந்து 2 குடும்பங்களை சேர்ந்த ஒரு ஆண், 2 பெண்கள், 3 குழந்தைகள் ஆகிய 6 பேர் நேற்று முன்தினம் இரவு தலைமன்னார் பகுதியில் இருந்து பிளாஸ்டிக் படகு மூலமாக புறப்பட்டு தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் உள்ள 4-வது மணல்திட்டு பகுதிக்கு வந்து சேர்ந்தனர்.

தகவல் அறிந்த இந்திய கடலோர காவல் படையினர் 6 பேரையும் பாதுகாப்பாக கப்பலில் ஏற்றி மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல்படை நிலையத்திற்கு அழைத்து வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கினர்.

விசாரணையில் இலங்ைகயில் கடும் விைலவாசி உயர்வு காரணமாக 2 குடும்பத்தினரும் படகோட்டிகளுக்கு பணம் கொடுத்து தமிழகத்துக்கு அகதிகளாக வந்தது தெரியவந்தது. பின்னர் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

தனுஷ்கோடிக்கு அகதியாக 2 குழந்தைகளுடன் தப்பி வந்த இலங்கை பெண் கியூரி கூறுகையில், ‘இலங்கையில் நாளுக்கு நாள் உணவுப்பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலையும் அதிகரித்து வருகிறது. ஒரு கிலோ அரிசி ரூ.250 ரூபாய், பிஸ்கட் பாக்கெட் ஒன்று ரூ.230, ரொட்டி ஒரு பாக்கெட் 100 ரூபாய், பால், பருப்பு 300 ரூபாய் என அனைத்து பொருட்களின் விலையும் பலமடங்கு உயர்ந்துவிட்டது.

உயர்ந்து வரும் விலைவாசி உயர்வால் குழந்தைகளுக்கு எதுவும் வாங்கி கொடுக்க முடியாத நிலைதான் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாகவே குழந்தைகளும், நானும் சரியாக சாப்பிட முடியாமல் கஷ்டப்பட்டோம். அங்கு உயிர் வாழ வழியில்லை. எனவே படகிற்கு ரூ.1 லட்சம் கொடுத்து தமிழகம் வந்துவிட்டேன்’ என்று தெரிவித்தார்.

இதே கருத்தையே கஜேந்திரன், கிளாரா தம்பதியும் தெரிவித்தனர்.

இதனிடையே தனுஷ்கோடி பாலம் கடற்கரை பகுதியில் நேற்று இரவு ஒரு படகில் 10 பேர் வந்து இறங்கியுள்ளதாக கிடைத்த தகவலை தொடர்ந்து கியூ பிரிவு மற்றும் கடலோர போலீசார் அங்கு விரைந்து சென்று அங்கு வந்திறங்கிய இலங்கை அகதிகள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!