இரவில் பணி முடிந்து தினமும் 10 கி.மீ. தூரம் ஓடும் இளைஞர்… பின்னணி என்ன?

இளைஞர் ஒருவர் தினமும் பணி முடிந்து இரவில் 10 கி.மீ. தூரம் ஓடி சென்று வீட்டை அடைவதற்கான பின்னணி சோகத்துடன், பெருமையும் வரவழைக்கிறது.

உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19). வேலை நிமித்தம் 10 கி.மீ. தொலைவில் உள்ள நொய்டா செக்டார் 16 பகுதிக்கு செல்கிறார். பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது.

ஆனால், மற்றவர்களை போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தவில்லை. அதற்கு பதிலாக, பணி முடிந்ததும் இரவில், நொய்டா சாலையில் 10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகிறார்.

இதனை நெடுநாளாக பட தயாரிப்பாளர் வினோத் காப்ரி கவனித்து உள்ளார். அவர் தனது வாகனத்தில் செல்லும்போது, பிரதீப்பிடம் நெருங்கி, வீட்டில் கொண்டு விட்டு விடுகிறேன் என கூறியுள்ளார்.

ஆனால், அதனை ஏற்க பிரதீப் மறுத்து விட்டார். வியர்க்க, விறுவிறுக்க செல்லும் பிரதீப்பின் பின்னணி பற்றி அறிந்து கொள்வதில் காப்ரி ஆர்வம் காட்டினார். இதற்காக, சாலையின் ஓரம் செல்லும் பிரதீப்பிடம், வாகனம் ஓட்டியபடி பேசி கொண்டே பயணித்து உள்ளார்.

ஏன், வழிநெடுகிலும் ஓடி கொண்டிருக்கிறாய்? என கேட்டதற்கு, ராணுவத்தில் சேர்வதற்கு என பதில் வந்துள்ளது. தொடர்ந்து பிரதீப் கூறும்போது, காலையில் தன்னால் பயிற்சி மேற்கொள்ள முடியாது. ஏனெனில் தினமும் காலை 8 மணிக்கு எழுந்து, பணிக்கு செல்வதற்கு முன் உணவு சமைக்க வேண்டும் என கூறுகிறார்.

இவருக்கு இளைய சகோதரர் ஒருவர் இருக்கிறார். இவரது தாயார் உடல்நல குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பிரதீப்பின் இரவு நேர பயணம் அடங்கிய வீடியோ பதிவை காப்ரி வெளியிட்டு உள்ளார்.

இந்த வீடியோ வைரலாகி, அதனை 40 லட்சம் பேர் பார்வையிட்டு உள்ளனர். இந்த வயதில், குடும்ப சுமையை ஏற்று கொண்டு, இலட்சிய நோக்குடன் ஓடி கொண்டிருக்கும் பிரதீப்புக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இதுபோன்ற குடிமக்கள் நமது நாட்டுக்கு பெருமை சேர்க்கின்றனர் என பலரும் சமூக வலைதளங்களில் தங்களுடைய விமர்சனங்களை பதிவிட்டு வருகின்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி