வேண்டுதல்களுக்கு இன்பத்தைத் தரும் எளிய பரிகாரங்கள்!

பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.


இன்பம் மட்டுமே நிறைந்த வாழ்க்கை, எந்த மனிதர்களுக்கும் அமைவதில்லை. துன்பம் இல்லாத மனித வாழ்வு சாத்தியமற்றது. ஆனால் சில எளிய பரிகாரங்களின் மூலமாக, நமக்கு வரும் துன்பத்தின் வீரியத்தை பல மடங்கு குறைத்துக்கொள்ள முடியும். அதில் சில எளிய வகை பரிகாரங்களைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று தொடங்கி, தொடர்ச்சியாக 11 மாதங்கள் சிவபெருமானுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டால், தடைபட்டு வந்த திருமணம் விரைவில் நடந்தேறும்.

நாம் செய்யும் காரியங்கள் எந்த தடையும் இன்றி நடைபெறுவதற்கு, துர்க்கையை வழிபடுவது சிறப்புக்குரியது. அதுவும் ராகு காலத்தில் செய்யப்படும் துர்க்கை வழிபாட்டிற்கு பலன் அதிகம். 1½ மணி நேரம் கொண்ட ராகு காலத்தில், கடைசி ½ மணி நேரத்தை ‘அமிர்தகடிகை நேரம்’ என்பார்கள். இந்த நேரத்தில் நெய்விளக்கு ஏற்ற உகந்த நேரமாகச் சொல்வார்கள். ஞாயிற்றுகிழமை வரும் ராகு காலத்தில் (மாலை 4.30-6 மணி) துர்க்கைக்கு விளக்கு ஏற்றி வழிபட, வேண்டிய காரியங்கள் வெகு சுலபமாக நிறைவேறும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் (காலை 10.30-12 மணி) தாமரை தண்டை திரியாக போட்டு, நெய்விளக்கேற்றி துர்க்கையை வழிபட்டால், தெய்வ குற்றம், குடும்ப சாபம் நீங்கும்.

அஸ்த நட்சத்திரம் அன்று துர்க்கைக்கு சிவப்பு பட்டு துணி சாத்தி, சிவப்பு தாமரையை பாதத்தில் வைத்து, 27 எண்ணிக்கை கொண்ட எலுமிச்சை பழ மாலை சூட்டி, குங்கும அர்ச்சனை செய்து, அந்த குங்குமத்தை தினமும் நெற்றியில் வைத்து வர விரைவில் திருமணம் நடைபெறும்.

சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டி, அர்ச்சனை செய்து வழிபட்டால் சங்கடங்கள் தீரும். விநாயகருக்கு எருக்கம் இலையில் திரிபோட்டு விளக்கேற்றி வழிபட்டால் பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும்.

கடன் பிரச்சினை இருப்பவர்கள், இரட்டை பிள்ளையார் அருளும் ஆலயங்களுக்கு ரோகிணி நட்சத்திரம் அன்று சென்று, சந்தனக் காப்பு செய்து வழிபட்டால் கடன் தொல்லை குறையும்.

நவக்கிரகத்தில் உள்ள அங்காரகன் என்னும் செவ்வாய் கிரகத்திற்கு அதிபதியாக இருப்பவர், முருகப்பெருமான். வேலை கிடைக்காமல் அவதிப்படுபவர்கள், செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானுக்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால் நல்ல வேலை அமையும்.

விபத்துகளில் இருந்து தப்பிக்க அவிட்ட நட்சத்திரம் அன்று முருகனுக்கு வேல் ஆயுதத்தில் எலுமிச்சைப்பழத்தைச் சொருகி வைத்து வழிபடுவதோடு, முருகனுக்கு அர்ச்சனையும் செய்யுங்கள்.

ருத்ராட்சம், சாளக்கிராமம், துளசி, வில்வம் உள்ள இடத்தில் செய்வினை வேலை செய்யாது. எனவே வீட்டின் பூஜை அறையில் இந்த பொருட்களை வைத்திருங்கள்.

பஞ்சகவ்ய கலவையை வாரம் ஒரு முறை வீடுகளில் தெளித்து வந்தால், தோஷம், தீட்டு போன்றவை விலகி லட்சுமி கடாட்சம் வீட்டில் நிறையும். பால், தயிர், நெய், கோமியம், சாணம் கலந்தது பஞ்சகவ்ய கலவை.

குழந்தைப் பேறு வாய்க்கப் பெறாதவர்கள், தொடர்ச்சியாக 6 தேய்பிறை அஷ்டமி நாட்களில் காலபைரவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து வழிபட்டால், புத்திர பாக்கியம் கிடைக்கப்பெறும்.

பெருமாள் கோவிலில் உள்ள கருடாழ்வார் சன்னிதியை சுற்றி வந்து நெய்விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம் நீங்கும்.

வறுமையில் இருப்பவருக்கு தானம் கொடுப்பது, பூஜை நடக்காமல் இருக்கும் கோவில்களில் பூஜை நடக்க உதவி செய்வது, இறந்துபோன ஆதாரவற்றவர்களின் உடல் தகனத்திற்கு உதவி செய்வது போன்ற மூன்றும், அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கச் செய்யும்.

எத்தகைய கிரக தோஷமாக இருந்தாலும் சரி… ராமாயணத்தில் உள்ள சுந்தரகாண்டத்தில் இருந்து தினமும் ஒரு அத்தியாயம் பாராயணம் செய்து வந்தால் போதுமானது. உங்களுடைய தோஷங்கள் விலகும்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!