வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில்… மூச்சு திணறல் ஏற்பட்டு தாய் மற்றும் 2 மகள்கள் சாவு!

கோவையில் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மூச்சு திணறல் ஏற்பட்டு தாய் மற்றும் 2 மகள்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

கோவை மாவட்டம், உருமாண்டம்பாளையம் ஜோஸ் கார்டன் பகுதியை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவருக்கு அர்ச்சனா மற்றும் அஞ்சலி என 2 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு இதுவரை திருமணம் ஆகவில்லை.

3 பேர் பலி

இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் வீட்டில் இருந்து புகை வந்தது. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் கவுண்டம்பாளையம் வடக்கு தீயணைப்பு துறையினர் வந்து கதவை உடைத்து தீயை அனைத்தனர். இதைதொடர்ந்து உள்ளே சென்று பார்த்தபோது 3 பேரும் மூச்சுத் திணறல் ஏற்பட்டு பலியாகி இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜபாண்டியன், துடியலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். இதை தொடர்ந்து உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தீ விபத்து

இதுகுறித்து போலீசார் கூறும்போது வீட்டில் இருந்த யு.பி.எஸ். கருவியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக புகை ஏற்பட்டு உள்ளது. இதை அஞ்சலி மற்றும் விஜயலட்சுமி ஆகியோர் சேர்ந்து அணைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அதற்குள் புகையால் மூச்சுதிணறல் ஏற்பட்டு அஞ்சலியும், விஜயலட்சுமியும் இறந்தனர். இதேபோல் படுக்கை அறையில் தூங்கிக்கொண்டிருந்த அர்ச்சனாவும் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். மேலும் அவர்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகி உள்ளது, என்றனர்.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!