வீடு கட்ட ஆசை முடியல… 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் விபரீதமுடிவு!

சீர்காழி அருகே கடன் பிரச்சினையால் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா நாங்கூர் கன்னி கோயில் தெருவை சேர்ந்தவர் காக்களிங்கம் மகன் கார்த்திக் (வயது 32.) இவரும் தென்னலக்குடி கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் மகள் பாரதி (27) என்பவரும் காதலித்து கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு கௌசிக் என்ற மூன்றரை வயது மகனும், பவதாரணி என்ற 8 மாத பெண் குழந்தையும் உள்ளனர்.

இவர்கள் இருவரும் தற்போது சீர்காழி தென்பாதியிலுள்ள என்.எஸ்.பி நகரில் வாடகை குடியிருப்பில் வசித்து வருகின்றனர். லாரி டிரைவரான கார்த்திக் வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு லாரி ஓட்டிக்கொண்டு அடிக்கடி சென்று விடுவது வழக்கம். கார்த்தி பலரிடம் கடன் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

சொந்தமாக இடம் வாங்கி, வீடு கட்ட வேண்டும் என பாரதி தனது கணவரிடம் கூறி வந்த நிலையில், கடன் மட்டும் வாங்கி வந்ததால் மனம் உடைந்த பாரதி தனது கணவர் கார்த்திக் வெளியூருக்கு வேலைக்கு சென்றிருந்த நிலையில் தனது குழந்தைகள் இருவரையும் ஜன்னலில் தூக்கு மாட்டி கொன்றுவிட்டு, தானும் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த சீர்காழி துணை போலீஸ் சூப்பிரண்டு லாமெக், இன்ஸ்பெக்டர் மணிமாறன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன் தொடர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விசாரணையின் போது பாரதி எழுதி வைத்திருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில் எங்கள் சாவுக்கு யாரும் காரணம் கிடையாது. நான் எங்கள் அப்பா அம்மாவை விட்டுவிட்டு வந்தது தவறு. என் கணவருக்கு கடன் அதிகம் உள்ளது. எங்களுக்கு இடம் வாங்கி வீடு கட்ட தெரியாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!