இது தான் மூன்றாம் உலகப் போர் – அமெரிக்க அதிபர் ஜோ பைடன் எச்சரிக்கை!

உக்ரைன் மீது ரஷிய படைகள் 17வது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன.

உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா அந்நாட்டின் பல்வேறு நகரங்களில் கடும் தாக்குதலில் ஈடுபட்டு வருகிறது.

ரஷிய படைகளுக்கு, உக்ரைன் ராணுவ வீரர்களும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

உக்ரைனில் போர் நடைபெறும் பகுதி

இரு நாடுகள் இடையேயான போர் 17வது நாளாக நீடிக்கும் நிலையில், மரியுபோல் நகரில் இதுவரை பொதுமக்கள் 1,582 பேர் ரஷிய தாக்குதலுக்கு உயிரிழந்துள்ளதாக உக்ரைன் வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசியதாவது:

ஐரோப்பாவில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுடன் நாங்கள் தொடர்ந்து ஒன்றாக நிற்போம். முழு பலத்துடன் நேட்டோ பிரதேசத்தின் ஒவ்வொரு
அங்குலத்தையும் பாதுகாப்போம், நேட்டோவை பலப்படுத்துவோம். உக்ரைனில் ரஷியாவுக்கு எதிராக நாங்கள் போரிட மாட்டோம்.

நேட்டோவிற்கும் ரஷியாவிற்கும் இடையிலான நேரடி மோதலே மூன்றாம் உலகப் போர். கிரம்ளின் மூன்றாம் உலக போரை தூண்டுகிறது.அதை தடுக்க நாம் முயற்சி செய்ய வேண்டும். உக்ரைனில் ரஷியாவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது.

ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதற்காக ரஷியா கடுமையான விலை கொடுக்க நேரிடும்.அவர் (விளாடிமிர் புதின்) சண்டையின்றி உக்ரைனில் ஆதிக்கம் செலுத்தலாம் என்று நம்பினார், அவர் தோல்வியுற்றார். உக்ரைன் பிரச்சினையில் அமெரிக்க மக்களும் உலகமும் ஒன்றுபட்டுள்ளன.

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.- source: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!