கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரின் மண்டையை உடைத்த வாலிபர்!

ஜோலார்பேட்டையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்டவரின் மண்டையை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டையில் உள்ள வக்கணம்பட்டி காமராஜ் தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (43). கூலி வேலை செய்து வருகிறார். இவர் சக்கர குப்பம் பகுதியை சேர்ந்த காந்திராஜன் (27) என்பவருக்கு 700 ரூபாய் கடன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 5ம் தேதி ஜோலார்பேட்டை ஜங்ஷன் பகுதியில் காந்திராஜனிடம் தான் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த காந்திராஜன் ராஜ்குமாரை தகாத வார்த்தைகளால் திட்டி கட்டையைக் கொண்டு தலை மற்றும் கைகளில் தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாரை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதையடுத்து ராஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து காந்திராஜனை நேற்று கைது செய்து திருப்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட நபரை மரக்கட்டையால் தாக்கி மண்டையை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.- source: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!