கருவை கலைக்க முயன்ற கர்ப்பிணிக்கு நடந்த சோகம்!

திருக்கோவிலூர் அருகே மருத்துவர்களின் ஆலோசனையை மீறி தனியார் மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்ட இளம்பெண் உயிரிழந்துவிட்டார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கீழப்பாடி கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி என்பவரது மனைவி செல்வி. 25 வயதுடைய இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள். இந்நிலையில் மீண்டும் கர்ப்பமான செல்வி, 5 மாத கர்ப்பிணியாக இருந்தார்.

மணிமுத்தாறு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சோதனை செய்ததில் சிசுவுக்கு இருதய குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது.

இதையடுத்து பல்வேறு மருத்துவமனைக்கு சென்று கருக்கலைப்பு செய்ய முயன்ற போது அவர்கள் மறுத்துவிட்டனர். சொந்த ஊரான கீழப்பாடி கிராமத்தில், மணிகண்டன் என்பவருக்கு சொந்தமான மருந்தகத்தில் கருக்கலைப்பு மாத்திரை வாங்கி சாப்பிட்டிருக்கிறார்.

இதனால் ரத்தப்போக்கு ஏற்பட்டு சுயநினைவு இழந்த செல்வியை திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு காரில் கொண்டு சென்றபோது வழியிலேயே இறந்துவிட்டார். இதுகுறித்து ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.- source: dinakaran * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!